மான் வேட்டையில் ஈடுபட்டதாக 3 தமிழர்களை சுட்டுக் கொன்ற கர்நாடக வனத்துறை - என்ன நடந்தது?
கர்நாடகா வனத்துறையில் ‘என்கவுண்ட்டரில்’ 3 வேட்டைக்காரர்களை சுட்டுக் கொன்றதாக அம்மாநில அரசு அறிவித்திருந்தது. ஆனால் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேரும் தமிழர்கள் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம், சாம்ராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹனூர் அருகில் காவிரி வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுதிக்குட்பட்ட தோமையார்பாளையம் அருகே சிலர் சட்ட விரோதமாக மான்களை வேட்டையாடுவதாக நேற்று முன்தினம் இரவு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து,வனத்துறை போலீசார் இரு குழுக்களாக பிரிந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று அதிகாலை 5 மணியளவில் தோமையார்பாளையத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியின்போது, வனப்பகுதிக்குள் மான் வேட்டையாடி இறைச்சியைப் பிரித்துக் கொண்டிருந்த கும்பலை வனத்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். அப்போது அவர்கள் நாட்டுத் துப்பாக்கியால் வனத்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதால், தற்காப்புக்காக வனத்துறையினர் நடத்திய பதிலடித் துப்பாக்கிச் சூட்டில் மரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த அந்தோனிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மகிமை தாஸ் (48) மைசூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், கர்நாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் வேட்டையாடப் செல்லவில்லை; அப்பாவி பொதுமக்கள் என்று கூறி அவர்களது உறவினர்களும் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த கொடூர படுகொலையைக் கண்டித்து கொள்ளேகால், ஹனூர், தோமையார் பாளையம், ஜகன்னாத தொட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள வனத்துறை அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், “ வனப்பகுதியில் நடந்த என்கவுண்ட்டரில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
Tags: தமிழக செய்திகள்