தவெக ஆட்சியமைக்க திமுக இடையூறு செய்யாது - மு.க.ஸ்டாலின்
தவெக ஆட்சியமைக்க திமுக இடையூறு செய்யாது - மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. .தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
தமிழக வெற்றிக்கழகம் தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று விஜய்யை சந்தித்து, 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர். இதனை தொடர்ந்து, த.வெ.க. தலைவர் விஜய் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்து தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்காக உரிமை கோரினார்.
ஆனால் இதுவரை விஜய்யை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை.
இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தனிப்பெரும் கட்சியான தவெக ஆட்சியமைக்க திமுக இடையூறு செய்யாது. விஜய் ஆட்சிக்கு ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் தொடர்ந்து கவனிப்போம்.
திமுக அரசின் திட்டங்களை தவெக தொடர வேண்டுமென எதிர்பார்க்கிறேன். மகளிருக்கு மாதம் ரூ.2,500 அளிப்பது கடினம்; திமுக அரசு வழங்கியது போன்று மாதம் ரூ.1,000-வது வழங்க வேண்டும்.
ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் தருவதாக விஜய் வாக்குறுதி கொடுத்துள்ளார். அது சந்தேகம்தான்.. ஆனால் அதைச் செய்தால் மகிழ்ச்சி. உடனடியாக தேர்தல் வருவதை திமுக விரும்பவில்லை. அரசமைப்பு குழப்பம் ஏற்படுவதையும் திமுக விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Tags: அரசியல் செய்திகள்
