பெண்கள் குறித்து அவதூறாக பேசிய பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்த விஜய்
பெண்கள் குறித்து அவதூறாக பேசிய பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்த விஜய்
தவெக தலைவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு வருகை தந்து, பொன்ராஜ் மீது புகார் கொடுத்திருக்கிறார்.
அரசியல் விமர்சகர் பொன்ராஜ் யூடியூப் பேட்டியில் பேசும்போது, பெண்கள் குறித்து அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியிருந்தார். இதற்கு தவெக தரப்பில் இருந்து கொள்கைப்பரப்பு செயலாளர் அருண்ராஜ் மற்றும் அக்கட்சித் தலைவர் விஜய் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இது குறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார்.
தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய், சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு வருகை தந்து, பொன்ராஜ் மீது புகார் கொடுத்திருக்கிறார். சுமார் ஐந்து நிமிடங்களில் புகார் கொடுத்துவிட்டு, அங்கிருந்து விஜய் புறப்பட்டு சென்றார்.
இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “யூடியூப் மூலமாக தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்தி, தி.மு.க.வின் ஆதரவோடு பொன்ராஜ், பெண்களை இழிவுப்படுத்தி பேசியிருப்பதன் மீது உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய், இன்று டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்” எனத் தெரிவித்தார்
Tags: அரசியல் செய்திகள்
