இறந்த காகங்களை கையால் தொடாதீங்க..! சுகாதாரத் துறை எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் சில இடங்களில் தொடர்ந்து காகங்கள் இறந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, சுகாதாரத் துறை மற்றும் கால்நடைத் துறை இணைந்து, கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன.
பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகள் மற்றும் பிற பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று பரவும் வாய்ப்பு இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட பறவைகளின் கழிவுகள் மூலமாக மனிதர்களுக்கு எளிதில் தொற்று ஏற்படக்கூடும் என்றும் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பறவையிடமிருந்தோ அல்லது மனிதரிடமிருந்தோ ‘வெஸ்ட் நைல் வைரஸ்’ போன்ற தொற்றுகளை கொசுக்கள் கடத்தும் அபாயமும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றால் காய்ச்சல், தலைவலி, தசை வலி, இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள செய்தி
பறவை பறவை காய்ச்சல் என்பது பெரும்பாலும் பறவைகளுக்கு இடையே பரவும் ஒரு வைரஸ் நோய் ஆகும். பாதிக்கப்பட்ட பறவைகளிடமிருந்து மற்ற பறவைகளுக்கு பரவுவதால் இறப்பை வைத்து இறந்த பறவைகளின் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்நோயானது மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு மிகவும் அரிது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்றவை இந்நோயின் சில அறிகுறிகள் ஆகும். இந்நோயானது பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு நேரிடையாகவும் தூய்மை கேடு உள்ள சூழ்நிலையிலும் பரவ வாய்ப்பு உள்ளது.
இது சம்பந்தமாக பொது மக்களுக்கு கீழ்கண்ட சுகாதார அறிவுரைகள் வழங்கப்படுகிறது
ப்ளு போன்ற அறிகுறிகள் (IL) -இருமல், சளி, காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
பறவைகளை கையாள்பவர்கள் குறிப்பாக உடல்நலம் குன்றிய பறவைகளை கையாள்பவர்கள். இறந்த பறவைகளை கையாள்பவர்கள் மற்றும் இறைச்சி கூடத்தில் பணிபுரிபவர்கள் கவனத்துடன் பணிபுரியவும். ஏதேனும் ப்ளு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் / அரசு மருத்துவமனை /மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
அசாதாரண பறவை இறப்புகள் இருப்பின் உடனே கால் நடை மருத்துவ துறைக்கு தெரிவிக்க வேண்டும். கைகளை கழுவுதல் உட்பட தன்சுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தினை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
முற்றிலும் சமைக்கப்படாத மற்றும் சரிவர சமைக்கப்படாத முட்டை மற்றும் இறைச்சி வகைகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.
பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
இந்நோய் சம்மந்தமான வதந்திகளை நம்ப வேண்டாம்.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி எண். 104 ஐ தொடர்பு கொள்ளவும்.
Tags: தமிழக செய்திகள்
