ஜம்மு காஷ்மீர் காவல் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழப்பு - 29 பேர் காயம்
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள நௌகாம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) நள்ளிரவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களைச் சோதனை செய்தபோது எதிர்பாராதவிதமாக இந்த விபத்து நடந்ததில், ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் காவலர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆவர். இதில் மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
இரவு 11:20 மணியளவில், தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய முக்கிய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களைச் சட்டப்பிரிவு மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொண்ட குழு ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இந்தச் சக்திவாய்ந்த வெடிவிபத்து நிகழ்ந்தது.
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பாக பரிதாபாத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 360 கிலோ வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த முகமில் ஷகீல் கனியா என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் விசாரணைக்காக ஜம்மு காஷ்மீரின் நவ்காம் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் வெடிபொருட்களை ஆய்வு செய்துக் கொண்டிருந்தபோது திடீரென அந்த வெடிபொருட்கள் வெடித்ததால் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் 27க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: இந்திய செய்திகள்
