கரூர் கூட்ட நெரிசல் வழக்கு - உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை தீர்ப்பு..!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை விசாரிக்க அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதன்படி இந்த குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த உத்தரவுக்கு எதிராக தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் வக்கீல் விஜய் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்
இதுதொடர்பான அந்த மனுவில், “கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு கட்சித்தொண்டர்களையும், ரசிகர்களையும் பொறுப்பற்ற முறையில் கைவிட்டுவிட்டு தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓடியுள்ளதாக ஐகோர்ட்டு கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளது. இவை விஜய், அக்கட்சியின் முன்னணி தலைவர்கள்மீது தவறான எண்ணத்தை உருவாக்கி உள்ளது.
த.வெ.க. தரப்பு கருத்துகளை முன்வைக்க வாய்ப்பு அளிக்காமல், கரூரில் 41 பேர் பலியான வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில், நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலுக்கு சில ரவுடிகளால் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதியே காரணம் என்பதை மறுக்க முடியாது. சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துப் பிறப்பித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
கரூர் சம்பவத்தைச் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு எதிரான மனுக்கள், சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள்மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியது. நீதிபதிகள் ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது.
தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, பி.வில்சன், ரவீந்திரன் ஆஜராகினர். தவெக சார்பில் வழக்கறிஞர்கள் தாமா சேஷாத்ரி, கோபால் சங்கர் நாராயணன் ஆகியோர் ஆஜராகி தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
தவெக வாதம்
போலீசார் அறிவுறுத்தலின் படியே கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இருந்து விஜய் வெளியேறினார்.
விஜய் இருந்திருந்தால் நிலைமை மேலும் சிக்கலாகிவிடும் என போலீசார் தெரிவித்தனர்.
விஜய் தப்பி ஓடியதாக அரசு தரப்பு கூறியது முற்றிலும் தவறானது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரும் வழக்கு தொடர்பாக மாநில அதிகாரிகளின் விசாரணையில் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை இல்லை என தெரிவிக்கப்பட்டது.
கூட்ட நெரிசலில் உயிரிழந்த சிறுவனின் தந்தை தரப்பில், கூட்ட நெரிசலுக்கு காவல்துறையின் தோல்வியே காரணம்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஜனவரி மாதம் அதிமுக கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இடையூறாக இருக்கும் என்பதால் தான் அனுமதி மறுக்கப்பட்டதாகக் காவல்துறை விளக்கம் கூறியது.
அந்த இடத்தில் தான் விஜய் கூட்டத்துக்குச் செப்டம்பரில் அனுமதி தரப்பட்டது. கரூர் பிரசாரத்தில் ரவுடிகள் நுழைந்தனர். காவல்துறை விசாரணையில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை இல்லை. உண்மை வெளிவர சிபிஐ விசாரணை தேவை.
நெரிசல் ஏற்படும் என்று திமுக உறுப்பினர் ஒருவர் முன்பே பதிவிட்டிருந்தார். கூட்டத்தில் நெரிசல் ஏற்படும் என்ற 3.15 மணியளவில் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். பதிவிட்டவர் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, மனுதாரர்களும் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.இந்நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுக்கள் மீது நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்