நாடு முழுவதும் வக்பு சொத்துக்களை பதிவு செய்ய உமீத் என்ற பெயரில் புதிய இணையதளம் துவக்கம்- மத்திய அரசு UMEED Portal For Waqf Registration
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் வக்ஃபு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட போது எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்த நிலையில், மறுபரிசீலனைக்காக நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
கூட்டுக்குழுவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், பாஜக கூட்டணி கட்சிகள் முன்வைத்த 14 திருத்தங்கள் மட்டும் ஏற்கப்பட்டு வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு மாநிலங்களவையில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு மசோதா நிறைவேறியது. குடியரசுத் தலைவர் ஒப்புதலைத் தொடர்ந்து வக்ஃபு திருத்தச் சட்டம் அமலானது.
வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக கட்சிகள், தனிநபர் என பலதரப்பில் தொடரப்பட்ட வழக்குகள் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வக்ப் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது
இந்நிலையில் நாடு முழுவதும் வக்ஃப் சொத்துகளை வெளிப்படைத்தன்மையுடன் மேலாண்மை செய்ய வசதியாக ‛உமீத்' UMEED எனும் போர்ட்டலை மத்திய அரசு ஜூன் 6ம் தேதி தொடங்க உள்ளது.
இந்த இணையதளத்தில் அனைத்து வக்ஃப் சொத்துகளும் அடுத்த 6 மாதங்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். சொத்துகளின் நீளம், அகலம் உள்ளிட்ட பிற விபரங்களுடன் சொத்து விவரம் பதிவு செய்யப்பட உள்ளது.
மேலும் அனுமதிக்கப்பட்ட காலத்துக்கு மேல் பதிவு செய்யப்படாத சொத்துக்குள் சர்ச்சைக்குரியதாக எடுத்து கொள்ளப்படும். அதன்பிறகு அந்த சொத்துகள் தீர்வுக்காக வக்ஃப் தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படும்.
இந்திய வக்பு சொத்து மேலாண்மை அமைப்பில் பதிவு செய்துள்ள அனைவரும் தற்போது உருவாக்கப்படும் மத்திய வக்பு போர்ட்டலில் புதிதாக பதிவு செய்ய வேண்டும் என்று சிறுபான்மை விவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய செயல்முறையின்படி கவனிப்பாளர் (முத்தவல்லி) சொத்து விவரங்களை பதிவிட்டு தயாரிப்பாளராக பணியாற்றுவார். வக்பு வாரிய அதிகாரிகள் அதனை சரிபார்ப்பவராக செயல்படுவர். இறுதியாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அரசு அதிகாரி அனுமதிப்பவராக செயல்படுவார்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் மார்க்க செய்தி