கர்நாடகா சர்ச்சை - மொழியியல் வல்லுநரா? வரலாற்று ஆய்வாளரா? கமலை விளாசிய உயர்நீதிமன்றம்!
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'தக் லைப்'. பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஜூன் 5ல் வெளியாகிறது.
சென்னையில் நடந்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார். நிகழ்ச்சியில் கமல் பேசுகையில், 'தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்' என்றார். இது தொடர்பான வீடியோ வெளியாகி, கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு கர்நாடக முதல்வா் சித்தராமையா உள்பட பல்வேறு கா்நாடக அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அவா் மன்னிப்பு கேட்கும் வரை கா்நாடகத்தில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை திரையிட அனுமதி கிடைக்காது என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் தக் லைஃப் படத்தின் பேனர்கள் கிழிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆனால் கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தப் பேச்சில் எந்தத் தவறும் இல்லை. இந்த விவகாரம் அரசியல் ஆக்கப்பட்டு வருகிறது. என்னுடைய அன்பு கா்நாடகம், ஆந்திரம், கேரள மக்களுக்குப் புரியும்.” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் கர்நாடகாவில் தக் லைப் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி, நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், படத்தை திட்டமிட்டபடி ஜூன் 5ல் வெளியிட அனுமதிக்குமாறும், படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடுமாறும் தனது மனுவில் கமல் கோரிக்கை வைத்துள்ளார்.இந்த வழக்கு இன்று (ஜுன் 3) விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி நாக பிரசன்னா விசாரித்தார்.அப்போது
நீங்கள் பெரிய நடிகராக இருந்து கொண்டு அப்படி பேசி இருக்க கூடாது.இந்த நாட்டின் பிரிவினை மொழிவாரி அடிப்படையில்தான் நடந்தது. ஒரு பொது நபர் இதுபோன்ற அறிக்கையை வெளியிட முடியாது. இதன் காரணமாக அமைதியின்மை, நல்லிணக்கமின்மை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மக்கள் மன்னிப்பு கேட்க மட்டுமே சொன்னார்கள். இப்போது நீங்கள் மன்னிப்பு கேட்காமல் இங்கு பாதுகாப்பு தேடி வருகிறீர்கள். நீங்கள் என்ன அடிப்படையில் அப்படி பேசினீர்கள், நீங்கள் ஒரு வரலாற்று ஆசிரியரா, மொழியியல் நிபுணரா? என்ன அடிப்படையில் பேசினீர்கள்?இதேபோன்ற அறிக்கையை ஸ்ரீ ராஜகோபால் வெளியிட்டது பொதுவெளியில் உள்ளது. அப்போதே அதற்காக அவரால் மன்னிப்பு கடிதம் எழுதப்பட்டது,
75 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதேபோன்ற பேச்சு உங்களால் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அன்று ராஜகோபால் மன்னிப்பு கேட்டார். இப்போது உங்கள் திரைப்படத்தை வெளியிட பாதுகாப்பு தேடுகிறீர்கள். நீங்கள் மன்னிப்பு கேட்டிருந்தால் போதுமானதாக இருந்திருக்கும்.
மணிரத்னம் படம் என்பதால் படத்தின் முக்கியத்துவம் உங்களுக்குத் தெரியும், ஆனால் நீங்கள் மன்னிப்பு அறிக்கை வெளியிட முடியாது என்று கூறுகிறீர்கள்.
நீங்களே உருவாக்கிய பிரச்சனைக்கு அரசாங்கத்தின் ஆதரவை எப்படி கேட்கிறீர்கள். நீங்கள் பேசிவிட்டு அதற்கு அரசு பாதுகாப்பு தர வேண்டுமா?
மொழி என்பது மக்களுடன் இணைந்த ஒரு உணர்வு. நீங்கள் ஒரு சாதாரண மனிதர் அல்ல, நீங்கள் ஒரு பொது நபர். சமூக ஊடகங்களில் எழுதுபவர்கள் கூட விசாரிக்கப்படுகிறார்கள். நீங்கள் பெரிய நபர்.நீங்கள் பெரிய தவறுதலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்போது கர்நாடகாவில் படத்தை ஓட்ட வேண்டும் என்கிறீர்கள்.
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்பது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் அளவுக்கு இருக்கக் கூடாது. நீங்கள் மன்னிப்பு கேட்கலாம், மன்னிப்பு கேட்டால் இங்கே வரும் வசூல் மூலம் சம்பாதிக்கலாம். நீங்கள் பேசியதை, திரும்பப் பெறலாம். அந்த பேச்சில் இப்போதும் உறுதியாக நிற்கிறீர்களா? இது தமிழ் மற்றும் கன்னட அறிக்கை சண்டை கிடையாது. நீங்கள் பேசியதால் வந்த பிரச்சனை.
கமல்ஹாசன்நாக்கு தவறி ஏதேனும் நடக்கலாம். ஆனால் தெரிந்து பேசிய விஷயங்கள் அப்படி இல்லை. நீங்கள் பேசிய வார்த்தையைத் திரும்பப் பெற முடியாது, ஆனால் மன்னிப்பு கேட்கலாம். உடைந்த முட்டையை மீண்டும் சேர்க்க முடியாது என்று நீதிபதிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்
- கமல்ஹாசன் என்ன வரலாற்று ஆய்வறிஞரா? மொழியியல் வல்லுநரா? தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?
- பிரச்னைக்கு காரணமே கமல்ஹாசனின் பேச்சுதான். மன்னிப்பு கேட்க முடியாது என்று வேறு கூறியுள்ளார். கர்நாடக மக்களின் உணர்வுகளை கமல் புண்படுத்தியுள்ளார்.
- வணிக ஆதாயம் மட்டும் வேண்டும் என இப்போது THUG LIFE படத்திற்காக நீதிமன்றத்தை நாடியுள்ளீர்கள். ஒரு மன்னிப்பு கேட்டாலே பிரச்னை தீர்ந்துவிடும்
- மன்னிப்பு கேட்க முடியாது.. ஆனால் உங்கள் படம் மட்டும் கர்நாடகத்தில் ஓட வேண்டுமா? மன்னிப்பு கேளுங்கள் அப்போதுதான் இங்கிருந்து சில கோடிகளை சம்பாதிக்க முடியும்.
- 2.30 மணிக்குள் ஒரு முடிவை கமல் தரப்பு கூற வேண்டும். பிறகு என்னுடைய தீர்ப்பை அறிவிக்கிறேன்.
30/05/2025 தேதியிட்ட உங்கள் கடிதத்தை நான் ஒப்புக்கொள்கிறேன். கர்நாடக மக்கள் மீதுள்ள ஆழ்ந்த மரியாதையின் காரணமாக, நான் நேர்மையுடன் பின்வருவனவற்றை வழங்குகிறேன்.புகழ்பெற்ற டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தினர், குறிப்பாக சிவ ராஜ்குமார் மீது உண்மையான பாசத்துடன் தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, சூழலில் இருந்து அகற்றப்பட்டது எனக்கு வேதனை அளிக்கிறது.
நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், கன்னடத்தை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடுவது அல்ல என்பதையும் மட்டுமே எனது வார்த்தைகள் வெளிப்படுத்தின. கன்னட மொழியின் வளமான பாரம்பரியம் குறித்து எந்த சர்ச்சையோ விவாதமோ இல்லை.தமிழைப் போலவே, கன்னடமும் நான் நீண்ட காலமாகப் போற்றும் ஒரு பெருமைமிக்க இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
எனது வாழ்க்கை முழுவதும், கன்னடம் பேசும் சமூகம் எனக்கு அளித்த அரவணைப்பையும் பாசத்தையும் நான் போற்றி வந்துள்ளேன், இதை நான் தெளிவான மனசாட்சியுடனும் உறுதியுடனும் கூறுகிறேன்: மொழியின் மீதான எனது அன்பு உண்மையானது, மேலும் கன்னடர்கள் தங்கள் தாய்மொழியின் மீது வைத்திருக்கும் அன்பின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்த நாட்டின் அனைத்து மொழிகளுடனும் எனக்குள்ள பந்தம் நிலையானது மற்றும் இதயப்பூர்வமானது. அனைத்து இந்திய மொழிகளின் சமமான கண்ணியத்திற்காக நான் எப்போதும் நின்று வருகிறேன், மேலும் ஒரு மொழியின் ஆதிக்கத்தை மற்றொரு மொழியின் மீது செலுத்துவதை நான் எதிர்க்கிறேன், ஏனெனில் இதுபோன்ற ஏற்றத்தாழ்வு இந்திய ஒன்றியத்தின் மொழியியல் கட்டமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
சினிமாவின் மொழியை நான் அறிவேன், பேசுகிறேன். சினிமா என்பது அன்பையும் பிணைப்பையும் மட்டுமே அறிந்த ஒரு உலகளாவிய மொழி. என் அறிக்கை நம் அனைவருக்கும் இடையேயான பிணைப்பையும் ஒற்றுமையையும் நிலைநாட்டுவதற்காகவும் இருந்தது.என் மூத்தவர்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த இந்த அன்பையும் பிணைப்பையும்தான் நான் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இந்த அன்பையும் பிணைப்பிலிருந்துதான் சிவண்ணா ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டார்.
இதன் காரணமாக சிவண்ணா இவ்வளவு அவமானத்தை சந்திக்க வேண்டியிருந்தது என்று நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால் ஒருவருக்கொருவர் நம் உண்மையான அன்பும் மரியாதையும் எப்போதும் நிலைத்திருக்கும், இப்போது உறுதியாகும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.சினிமா மக்களுக்கு இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும், அவர்களைப் பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது. இதுவே எனது அறிக்கையின் நோக்கம், பொது அமைதியின்மை மற்றும் விரோதத்திற்கு நான் ஒருபோதும் இடம் கொடுக்க விரும்பவில்லை, ஒருபோதும் விரும்பவில்லை.
எனது வார்த்தைகள் அவர்கள் விரும்பிய உணர்வில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், கர்நாடகா, அதன் மக்கள் மற்றும் அவர்களின் மொழி மீதான எனது நீடித்த பாசம் அதன் உண்மையான வெளிச்சத்தில் அங்கீகரிக்கப்படும் என்றும் நான் மனதார நம்புகிறேன். இந்த தவறான புரிதல் தற்காலிகமானது என்றும், நமது பரஸ்பர அன்பையும் மரியாதையையும் மீண்டும் வலியுறுத்த ஒரு வாய்ப்பு என்றும் நான் மனதார நம்புகிறேன்.
Tags: தமிழக செய்திகள்