கேதர்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்து – விமானி உட்பட 7 பேர் மரணம்.!
கேதர்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்து – விமானி உட்பட 7 பேர் மரணம்.!
உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத்தில் இருந்து குப்தகாஷிக்கு இன்று காலை 5.30 மணியளவில் விமானி, பக்தர்கள் என 7 பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த விபத்தில் 7 பேரும் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தத் தகவல் கிடைத்ததும், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆரியன் எனும் தனியார் நிறுவனத்திற்கு இந்த ஹெலிகாப்டர் சொந்தமானது. இந்த விபத்து, மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது
விபத்துக்கு காரணம், அந்தப் பகுதியில் வானிலை மிகவும் மோசமாக இருந்ததால், ஹெலிகாப்டர் வழி தவறிச் சென்றதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டரில் இருந்த பயணிகள், ராஜ்வீர் – பைலட், விக்ரம் ராவத், வினோத், திரிஷ்டி சிங், ராஜ்குமா, ஷ்ரத்தா, ராஷி – 10 வயது சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது வருத்தத்தை தெரிவித்து தனது எக்ஸ் பதிவில், “ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து மிகவும் சோகமான செய்தி கிடைத்துள்ளது. எஸ்.டி.ஆர்.எஃப், உள்ளூர் நிர்வாகம் மற்றும் பிற மீட்புக் குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags: இந்திய செய்திகள்