அரசு மருத்துவமனையில் டாக்டர் போல் நடித்து நோயாளியிடம் 7 சவரன் நகை திருட்டு முழுவிவரம்
அரசு மருத்துவமனையில் டாக்டர் போல் நடித்து நோயாளியிடம் 7 சவரன் நகை திருட்டு
சென்னை கொளத்துார் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரவல்லி, 55. இவர் உடல்நல பிரச்னை காரணமாக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுந்தரவல்லியை அவருடைய மருமகள் காஞ்சனா, 30, உடனிருந்து கவனித்து வந்தார். இந்நிலையில், காஞ்சனாவிடம், 35 வயது மதிக்கத்தக்க நபர், தான் டாக்டர் எனக்கூறி அறிமுகமாகி உள்ளார். அப்போது, காஞ்சனா தனக்கு கழுத்து வலி இருப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, அந்நபர் 'எக்ஸ் - ரே' எடுத்து பார்த்தால் என்ன பாதிப்பு என தெரிந்து விடும் எனக்கூறி, அவரே எக்ஸ் - ரே பிரிவிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே சென்றதும் எக்ஸ் - ரே மையத்திற்குள் நகைகளை அணியக் கூடாது. எனவே, தன்னிடம் கொடுக்கும்படி கேட்டுள்ளார். அவரை நம்பி, 7 சவரன் தங்க நகையை கழற்றி கொடுத்துள்ளார்.
பின், எக்ஸ்ரே எடுத்து விட்டு, காஞ்சனா வெளியே வந்தபோது, அந்நபர் அங்கு இல்லை.பின், அருகில் இருந்தவர்கள், மருத்துவமனை பணியாளர்களிடம் கேட்டபோது, அதுபோன்று டாக்டர் பணியில் இல்லை என தெரிவித்துள்ளார்.
பின், மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில், காஞ்சனா புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், மருத்துவமனை வளாகத்தில் உள்ள, 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்
Tags: தமிழக செய்திகள்