கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் ரூ.5 லட்சம் அபராதம் ,5 ஆண்டுகள் சிறை முழு விவரம் இதோ
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை முழு விவரம் இதோ
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடன் வழங்கும் சில நிறுவனங்கள் கடனை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
இந்நிலையில், தனி நபர்கள், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக பணம் வசூலிப்பதை தடுக்க வகை செய்யும் புதிய சட்ட திருத்த மசோதாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப் பேரவையில் ஏப்ரல் 26 ஆம் தேதி தாக்கல் செய்தார்.
அப்போது சட்ட திருத்த மசோதாவை வாசித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ''கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது. மீறுபவர்கள் மீது 5 ஆண்டு சிறை தண்டனை, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும். வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளி வர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும்'' என்றார்.
இந்த சட்ட மசோதா''வுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
Tags: தமிழக செய்திகள்