ரேணுகாம்பாள் கோவிலுக்கு தானமாக உண்டியலில் ரூ.4 கோடி மதிப்பிலான பத்திரத்தை போட்ட நபர்
ரேணுகாம்பாள் கோவிலுக்கு தானமாக உண்டியலில் ரூ.4 கோடி மதிப்பிலான பத்திரத்தை போட்ட நபர்
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த படவேடு பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 65), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி கஸ்தூரி இவர் அரசு தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களின் 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது
இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மே 2-ந் தேதி படவேட்டு ரேணுகாம்பாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய விஜயன் கையில் வைத்திருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள நில பத்திரத்தை உண்டியலில் போட்டுவிட்டு சென்று விட்டார்.
விஜயன் கோவில் உண்டியலில் பத்திரத்தை போட்ட தகவலறிந்த அவரது மனைவி மற்றும் மகள்கள் கோவில் ஊழியர்களிடம் சொத்து பத்திரம் எங்களுக்கு சொந்தமானது என்றும், அதனை எங்களது அனுமதி இல்லாமல் எப்படி எழுதி தர முடியும் என்றும் கேட்டு கதறி அழுதனர்.
இதனை அறிந்த விஜயன் கோவிலுக்கு வந்தார். கோவில் ஊழியர்களிடம் உண்டியலில் ரூ.4 கோடி மதிப்புடைய பத்திரம் உள்ளது.அதனை முறையாக கோவிலுக்கு மாற்றி எழுதி தருவதாகவும் கூறினார். இதனை கேட்டு கோவில் ஊழியர்கள், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அவரின் இந்த செயலால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து உண்டியல் காணிக்கை எண்ணும் இடத்திலேயே காத்துக் கிடக்கின்றனர்.
Tags: தமிழக செய்திகள்