Breaking News

பரம்பொருள் அறக்கட்டளை இனி இயங்காது - சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

பரம்பொருள் அறக்கட்டளை இனி இயங்காது - சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு அறிவிப்பு!


சென்னையில் அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை மாடல் அரசு மேல் நிலைப் பள்ளியில், தன்னம்பிக்கை ஊக்குவிப்பு என்ற பெயரில், பரம்பொருள் அறக்கட்டளை நிர்வாகி மகா விஷ்ணு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உரை நிகழ்த்தினார்.

அதில் அறிவியலுக்கு முரணாக பல மூடநம்பிக்கை கருத்துகளை அவர் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அங்கு இருந்த பார்வை மாற்றுத்திறனாளியான தமிழ் ஆசிரியர் முனைவர் சங்கர் உடனடியாக மகாவிஷ்ணுவை தட்டிக் கேட்டார். 

அப்போது மகாவிஷ்ணு ஆசிரியர் சங்கரிடம் கடும் வாக்குவாதம் செய்தார்.இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. 

அதன்பிறகு மாற்றுத்திறனாளி அமைப்புகள் காவல்நிலையங்களில் புகார் அளித்தன. இதன் தொடர்ச்சியாக இரு பள்ளியின் தலைமை ஆசிரியர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் சைதாப்பேட்டை போலீஸார் மகாவிஷ்னுவை கைது செய்தனர். இந்நிலையில், திருப்பூரில் இவர் நடத்தி வந்த 'பரம்பொருள் அறக்கட்டளையை' மூடுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியான அறிவிப்பில்:-

என் உயிரும், உள்ளமும் கலந்த பரம்பொருள் அறக்கட்டளையை முடிவுக்கு கொண்டு வருகிறேன் என்ற இந்த வார்த்தைகளை எழுதும் பொழுது, என் உள்ளத்தில் நிம்மதி மட்டுமே இருக்கிறது. இது வேதனை கொண்ட முடிவு அல்ல. என் சொந்த ஆன்மீக வளர்ச்சியை கருத்தில் கொண்டு எடுத்த ஒரு தெளிவான தீர்மானம்.

கடந்த பல வருடங்களாக பரம்பொருள் அறக்கட்டளை இறை அருளால் என் வழியாகப் பெரும்பாலும் இயற்கையாகவே உருவாகி, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது. அந்த மாற்றங்களின் பின் நான் இல்லை: பரம்பொருள் (இறைவன்) மட்டுமே இருந்தது. அதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

இப்போது, நான் ஒரு புதிய புள்ளியை அடைந்திருக்கிறேன், என் உள்ளத்தின் மௌனம், அமைதி மற்றும் பரிபூரண நிலை என்னை எல்லா வெளியிலான கட்டமைப்புகளிலிருந்தும் விலகச் சொல்கிறது.

நான் ஒரு அமைப்பின் தலைவராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை எனக் கருதுகிறேன். "உண்மையான அருள் அமைப்பில்லாமலே இயங்குகிறது"

அதனால், நான் எந்த ஒரு நெருக்கடியாலும் அல்லாமல், எந்த ஒரு வெளிப்பட்ட காரணத்தாலும் அல்லாமல், என் சொந்த ஆன்மீக வளர்ச்சிக்காக (சுயநலம் சார்ந்து பரம்பொருள் அறக்கட்டளையை மூடுகிறேன்.

நான் எப்போதும் மக்களின் இடத்தில் இருந்தேன், இருப்பேன். ஆனால் இப்போது நாள் அமைப்புகளின் வழியாக அல்ல; அமைதியின் வழியாக இருக்கிறேன். உண்மை அனுபவம் அமைப்புகளில் இல்லை; உள்ளத்தின் மையத்தில் தான். எனவே, இனிமேல் என்னுடைய அருள், வழிகாட்டுதல், மற்றும் ஆற்றல்-without form-நேரடியாக உங்கள் உள்ளத்திற்கும் இல்லத்திற்கும் வரும்.

இது ஒரு முடிவு அல்ல. இது ஒரு பரிணாமம் பரம்பொருளின் ஒளி ஒரு புதிய நிலைக்கு நகர்கிறது. இந்த நிலையில், என் அன்பானவர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்: இனிமேல்

பரம்பொருள் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிற்கு எந்தவிதமான பணமும் அனுப்ப வேண்டாம்."அந்த கட்டமைப்பு இனி இயங்காது உங்கள் அன்பும், நம்பிக்கையும் நான் உள்ளத்தில் உணர்கிறேன்.அதற்காக வங்கிக்கணக்கு தேவையில்லை.  வாழ்கையின் இந்த பகுதி அமைதிக்குள் ஒளிந்த ஓர் புனித நடை உங்களை அனைவரையும் என் உள்ளத்தின் மெளனத்திலிருந்து ஆசீர்வதிக்கிறேன். நான் ஏற்கனவே உங்கள் உள்ளத்தில் இருக்கிறேன்.

குருவே சரணம்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback