கேரளாவில் நடுக்கடலில் முழ்கிய கண்டெய்னர் கப்பல் முழு விவரம்
கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்கு சென்ற லைபீரியா நாட்டைச் சேர்ந்த MSC ELSA 3 என்ற சரக்குக் கப்பல் கவிழ்ந்து விபத்து.
கப்பலில் மொத்தம் பயணித்த 24 பேரில், 9 பேர் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 15 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்.
கேரளா கொச்சி துறைமுகத்திற்கு லைபீரியா கொடி கட்டிய கண்டெய்னர் கப்பல் ஒன்று நேற்று விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. இன்று கொச்சி துறைமுகம் வந்தடைய வேண்டிய நிலையில், கொச்சியின் தென்மேற்கு பகுதியில் 38 நாட்டிங்கல் மைல் தொலைவில் கடலில் மூழ்க தொடங்கியுள்ளது.
உடனடியாக கப்பல் மாலுமிகள், கடலோர காவல் படையினரிடம் உதவி கோரினர். அதன்பேரில், கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கண்டெய்னர் கப்பலில் 367.1 மெட்ரிக் டன் சல்பர் எரிவாயு எண்ணெயும், 84.4 மெட்ரிக் டன் கேஸ் எண்ணெயும் ஏற்றி வரப்பட்டுள்ளது. இந்த எண்ணெய் கடலில் கலந்தால், மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, இந்த எண்ணெய் கடலில் கலக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை கடலோர காவல் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கடலிலோ அல்லது கடற்ரையிலோ எண்ணெய் அல்லது கண்டெய்னர்களை கண்டால், பொதுமக்கள் அதனை தொடாமல், அருகே உள்ள கடலோர காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில் 112 என்ற அவசர எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்