வழக்கறிஞர்கள் விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கை... தமிழ்நாடு பார் கவுன்சில் எச்சரிக்கை
வழக்கறிஞர்கள் தொழில் தொடர்பாக விளம்பரம் செய்யக்கூடாது என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வழக்கறிஞர்கள், பொது இடங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விளம்பரங்கள் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பார் கவுன்சில் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது
சமூக வலைதளங்களில் ஒரே நாளில் உத்தரவு வாங்கி தரப்படும் எனக்கூறி பலரிடம் பெரும் தொகை பெற்று ஏமாற்றப்படுவது குறித்து புகார்கள் பார்கவுன்சிலுக்கு வந்துள்ளது.
வழக்கறிஞர்கள் தங்களது தொழில் தொடர்பாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த விளம்பரமும் செய்ய கூடாது.
வழக்கறிஞர்கள், சட்டம் குறித்து சமூக வலைதளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த எந்த தடையும் இல்லை ஆனால் விளம்பரம் செய்வது சட்ட விரோதமானது.
வழக்கறிஞர்கள் விளம்பரங்களை வெளியிடுவது பார்கவுன்சில் விதி 36ன்படி சட்டவிரோதமானது. வழக்கறிஞர்கள் நேரடியாகவோ, மறைமுகவோ போஸ்டர், பேனர் மற்றும் சமூக வலைதளங்களில் எந்தவித விளம்பரமும் செய்ய கூடாது. புகைப்படத்துடன் கூடிய பிறந்தநாள் விளம்பரம் வெளியிட்டாலும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் நேரத்தில் அதை எந்த வகையில் விளம்பரப்படுத்தினாலும் அவர்கள் பார்கவுன்சிலில் பதிவு செய்ய முடியாது.
சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களை சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டுமென்று அறிவுறுத்தி உள்ளோம்.
அது தொடர்பாக பார் கவுன்சில் இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் புகாராக அளிக்கலாம். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
Tags: தமிழக செய்திகள்