Breaking News

வாணியம்பாடி தனியார் பல் கிளினிக்கில் ஒரே கருவியை பயன்படுத்தி பல் சிகிச்சை செய்த மருத்துவர்... மூளை தொற்றால் 8 பேர் உயிரிழப்பு அதிர்ச்சி தகவல்

அட்மின் மீடியா
0

வாணியம்பாடி தனியார் பல் கிளினிக்கில் ஒரே கருவியை பயன்படுத்தி பல் சிகிச்சை செய்த மருத்துவர்... மூளை தொற்றால் 8 பேர் உயிரிழப்பு அதிர்ச்சி தகவல் 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 2023ஆம் ஆண்டில் தனியார் பல் கிளினிக்கில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றால் 8 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது

பல் சிகிச்சைக்கு பயன்படுத்தும் கருவியை முறையாக தூய்மைப்படுத்தாமல், ஒரே கருவியை அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்தியதால் 10 பேருக்கு தொற்று ஏற்பட்டதில் 8 பேர் பலி; தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம், வேலூர் சிஎம்சி மருத்துவர்களை கொண்ட குழு நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது

வாணியம்பாடி பகுதியில் பிரபல தனியார் பல் மருத்துவமனையில், கடந்த 2023ஆம் ஆண்டு 1) இந்திராணி (நியூ டவுன் பகுதி) 2) வரதன் (நியூ டவுன் பகுதி) 3) சத்யா (அலசந்தாபுரம்) 4) நர்மதா (கோணாமேடு) 5) ஜெய்சிலி (பெருமாள் பேட்டை) 6) ஆபிசூர் ரகுமான் (பெரிய பேட்டை) 7) அனிதா உதயேந்திரம் 8) இளங்கோவன் (செங்கிலிகுப்பம்) ஆகியோர் உள்பட 10 பேர் பல் வலி சிகிச்சைக்காக இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். 

இந்நிலையில், சிகிச்சை பெற்ற 10 பேரில் 8 பேர் 6 மாதத்திற்குள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.அதில் கடைசியாக உயிரிழந்த இந்திராணி என்பவரின் மகன் ஸ்ரீராம் குமார், எனது தாய்க்கு பல் மருத்துவர் முறையாக சிகிச்சை அளிக்காததால்தான் உயிரிழந்தார் எனவும் இங்கு சிகிச்சை பெற்ற 8 பேரின் இறப்புக்கும் அவர்கள் மேற்கொண்ட சிகிச்சைதான் காரணம் என கூறி வாணியம்பாடி நகர காவல் நிலையம், மாவட்ட மருத்துவ இணை இயக்குனர், மாவட்ட ஆட்சியர், தமிழக முதலமைச்சருக்கு புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்த 8 பேரும் ஒரே மாதிரி மூளையில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றான நியூரோமெலியோய்டோசிஸ் நோய் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தி லான்செட்டில் ஆய்வில் தெரியவந்துள்ளது. CMC வேலூர், ICMR-NIE மற்றும் தமிழ்நாடு பொதுச் சுகாதார இயக்குநரகம் உள்ளிட்ட பல அமைப்புகளை சேர்ந்த மருத்துவர்கள் குழு இதுகுறித்து நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது.

பல் சிகிச்சைகாக பெரியோஸ்டீயல் லிஃப்ட் எனப்படும் கருவி பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட மருத்துவமனையில் அசுத்தமான நிலையில் இருந்த பெரியோஸ்டீயல் லிஃப்ட் கருவி பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. 

மேலும் அந்த அசுத்தமான கருவியில் இருந்த பாக்டீரியா சிகிச்சையின் வழியே மூளைக்குள் சென்று சிகிச்சை பெற்ற 10 பேரை தொற்றுக்குள்ளாக்கியது.அதில் 8 பேர் நியூரோமெலியோய்டோசிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பலியாகியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, வலிப்பு, மண்டை நரம்பு வாதம், மூளை சீழ் பிடித்தல் ஆகிய அறிகுறிகள் தென்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் வாணியம்பாடியில் 8 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பல் மருத்துவருக்கு தபால் மூலம் விளக்கம் கேட்டு திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback