சீனாவில் பரவும் HMPV வைரஸ் குறித்து இந்தியர்கள் பயப்பட தேவையில்லை பொது சுகாதார இயக்குநரகம்
சீனாவில் பரவும் HMPV வைரஸ் குறித்து இந்தியர்கள் பயப்பட தேவையில்லை என பொது சுகாதார இயக்குநரகம் தகவல் வெளியிட்டுள்ளது
சீனாவின் வூகான் மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஓர் ஆட்டம் காட்டியது. அதன்பின்பு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது. கொரானா வந்து சுமார் 5 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் தற்போது சீனாவில் Human Meta-Pneumo Virus (HMPV) ஹியூமன் மெட்டாநியூமோவைரஸ் (HMPV) ஹெச்.எம்.பி.வி வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
சீனாவில் நிமோனியா காய்ச்சல் திடீரென அதிகரித்து வந்த நிலையில், காரணம் தெரியாமல் கண்காணித்து வந்த அந்நாட்டின் நோய்கள் கட்டுப்பாட்டு ஆணையம், ஹெச்.எம்.பி.வி வைரஸ் காரணமாகவே நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறியுள்ளது.
சீனாவை தாக்கி வரும் இந்த நோய் காரணமாக அங்குள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
ஹெச்.எம்.பி.வி வைரஸ் கடந்த 2001ல் முதன்முதலாக நெதர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதே இந்த வைரஸ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. குறிப்பிடத்தக்கது.
இந்த வைரஸ் நோய், எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களை பாதிக்கும் சுவாச வைரஸான இது சீன மக்களை பெரிய அளவில் பயமுறுத்தி வருகிறது.
இந்த வைரஸுக்கு தற்போது குறிப்பிட்ட தடுப்பூசி அல்லது மருந்து எதுவும் இல்லை என்பதால், அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதன் அடிப்படையில் மட்டுமே அதன் சிகிச்சை செய்யப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்
மேலும் இது கொரோனா போன்ற பெருந்தொற்றை மீண்டும் ஏற்படுத்துமோ என்னும் அச்சம் உலக மக்களிடையே நிலவிவருகிறது
அறிகுறிகள்:-
இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் ஆகியவை ஹெச்.எம்.பி.வி வைரஸ் தாக்குதலுக்கான முக்கிய அறிகுறிகளாக சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
மூச்சுக் குழாய் அழற்சி அல்லது நிமோனியா பாதிப்பும் கூட அறிகுறிகளாக ஹெச்.எம்.பி.வி வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகளாக இருப்பதாக சீன மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் இருமல் அல்லது தும்மலில் இருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலமாகப் பரவுவதாகவும் கூறியுள்ளனர்.
தற்காப்பு:-
நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்க, மீண்டும் கொரோனா காலத்தைப் போல மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளைக் கழுவுதல், கூட்ட நெரிசலான பகுதிகளுக்குச் எல்வதைத் தவிர்ப்பது என்று கொரோனா கால நடைமுறைகளை இப்போது சீனர்கள் மீண்டும் கடைபிடித்து வருகின்றனர்.
இதுவரையில் சீன அரசாங்கமும், உலக சுகாதார அமைப்பும் எந்தவொரு அதிகாரப்பூர்வ எச்சரிக்கையையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சீனாவில் இருந்து வெளியாகும் செய்திகள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் வைரஸ் விரைவாக பரவுவதைக் காட்டுகிறது
பொது சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்
சீனாவில் ‘ஹெச்எம்பிவி’ வைரஸ் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவில் பருவகால ஃபுளூ காய்ச்சல் பாதிப்பு தொடா்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த டிசம்பா் மாத தரவுகளின்படி, இப்பாதிப்பு எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு இல்லை. தற்போதைய சூழலில் யாரும் அச்சப்பட தேவையில்லை.பொதுவாக குளிா்காலங்களில் சுவாசத் தொற்று அதிகரிக்கும் என்பதால், மத்திய அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் மற்றும் படுக்கை வசதிகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன.
ஹெச்எம்பிவி பரவலால் சீனாவில் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக வெளியாகும் தகவலை அந்நாடு மறுத்துள்ளது.
இது தொடா்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் கூறுகையில், ‘குளிா்காலத்தில் சுவாச தொற்று பாதிப்புகள் உச்சமடைவது வழக்கமானதுதான். நடப்பாண்டில் சுவாச தொற்றின் தீவிரம், கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது. எனவே, சீனா வருவதற்கு யாரும் அச்சப்பட வேண்டாம்’ என்றாா்.
Tags: இந்திய செய்திகள்

