ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு
திமுக வேட்பாளர் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலை புறக்கணித்துள்ளது.
நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசியதில், திராவிட முன்னேற்றக் கழகம், இந்த தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது.
வருகிற 05-02-2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.கழக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக, திரு. வி.சி.சந்திரகுமார் (தி.மு.க.கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்) அவர்கள் போட்டியிடுவார்.
அதிமுக போட்டியில்லை:-
இன்று பிற்பகல் 3 மணிக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது என்பதால் புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு
எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை
சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுள்ள, நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில், 5.2.2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை கழகம் புறக்கணிக்கிறது! கழக நிறுவனத் தலைவர் 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு மாபெரும் பேரியக்கமான "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" தொடர்ந்து மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றி வருகிறது.
மறைந்த கருணாநிதியின் காலந்தொட்டு, திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் 'அராஜகம், வன்முறை என்றாலே திமுக - திமுக என்றாலே அராஜகம், வன்முறை' என்று மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு நடந்துகொண்டு வருவதை மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். திமுக ஆட்சிக் காலங்களில், திமுக-வினரால் நிகழ்த்தப்பட்ட அராஜக, வன்முறைச் சம்பவங்கள் எண்ணிலடங்காதவை.
கடந்த முறை நடைபெற்ற ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, கொலுசு, குக்கர், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் என, இவை எல்லாவற்றையும் தாண்டி திமுக-வின் மிரட்டல்,அப்பாவி மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தியது. வாக்காளர்களை பட்டியில் அடைத்த அவலமும் நடந்தேறியது. திமுக-வினர் அழைக்கும் இடத்திற்கு வந்து காலை முதல் இரவு வரை உட்கார்ந்து இருக்கவில்லையென்றால், முதியோர் உதவித் தொகையோ, வேறு எந்த அரசு நலத் திட்டங்களோ வழங்கப்படமாட்டாது என்கிற மிரட்டலுக்கு பயந்து, மக்கள் சொந்த மண்ணில் அகதிகளைப் போல நடத்தப்பட்ட விதத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.
இவ்வாறு, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்து, மக்களாட்சியின் மகத்துவத்தை மறந்து, வன்முறையில் ஈடுபடுவது மட்டுமே திமுக-வினரின் வாடிக்கை. நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலிலும், நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசின் அமைச்சர்களும், திமுக-வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதாலும்; பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும்; தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 5.2.2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Tags: அரசியல் செய்திகள்
