செல்போன் பேசியபடி கார் ஓட்டிய டிடிஎஃப் வாசன் கைது!
செல்போன் பேசியபடி கார் ஓட்டிய யூடியூபர் TTF வாசன் கைது!
TTF வாசன் வெளியிட்ட வீடியோவை அடிப்படையாக வைத்து 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மதுரை அண்ணா நகர் போலீசார் விசாரணை.
ஏற்கனவே பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்டு, பல நாட்கள் சிறை தண்டனைக்கு பிறகு டிடிஎஃப் வாசன் வெளியே வந்திருந்தார். அவர் பலமுறை ஜாமீன் கோரியும் கிடைக்காமல் இறுதியாக 10 ஆண்டுகள் இருசக்கர வாகனத்தை இயக்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டு ஜாமீன் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி நண்பர்களுடன் டிடிஎஃப் வாசன் காரில் சென்றுள்ளார். அப்பொழுது மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே செல்போனில் பேசியபடியே காரை இயக்கியதாகக் கூறப்படுகிறது.
இதை யூடியூப் சேனலில் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மணி பாரதி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மதுரை அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கவனக்குறைவாக செல்போனை பயன்படுத்தியபடி வாகனத்தை இயக்குதல், அஜாக்கிரதையாக கார் ஓட்டியது; பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மீண்டும் அவரை கைது செய்துள்ளனர்.
சென்னையில் வைத்து கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனை மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்
