கல்பாக்கம் அருகே சாலையில் குறுக்கே வந்த மாடு மீது மோதி கார் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சோகம்!
கல்பாக்கம் அருகே குறுக்கே வந்த மாடு மீது மோதி கார் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சோகம்!
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூரில் சாலையின் குறுக்கே வந்த மாடு மீது மோதிய கார், சாலையோர மரத்தின் மீதும் மோதி விபத்துக்குள்ளானதில் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
சென்னை வடபழனி அழகிரி நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், சூளைப்பள்ளம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ராஜேஷ் (22), ஏழுமலை (30), யுவராஜ் என ஐந்து பேர் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு காரில்சென்று சென்னை திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூர் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்த போது மாடு குறுக்கே வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க காரை இடதுபுறமாக திருப்பிய போது கார் 3 முறை பல்டி அடித்து பின் மரத்தில் மோதி கோரவிபத்து ஏற்பட்டது.
இதில் காரில் பயணம் செய்த சென்னை சூளைப்பள்ளம் ஏம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ராஜேஷ் (22) ஏழுமலை (30) மற்றும் வடபழனியைச் சேர்ந்த விக்னேஷ் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தைக் கண்ட வாயலூர் பகுதி மக்கள் காரில் சிக்கிக் கொண்டிருந்த வர்களை மீட்க முடியாமல் செய்வதறியாது திகைத்து நின்றனர் ஏன் என்றால் கார் மரத்தில் மோதியதில் கார் மரத்துல் சிக்கிகொண்டது
உடனடியாக காரின் மேற்புறத்தை வெல்டிங் மிஷின் வாயிலாக அறுத்து, காரில் இருந்த மூன்று பேரை சடலமாக மீட்டனர். மேலும் இருவரை செங்கல் பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த யுவராஜ் (26) மற்றும் மற்றொரு இளைஞரும் உயிரிழந்தனர்.
தொடர்ந்து 5 பேரின் உடல்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சட்ராஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்
