தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவராக செல்வப் பெருந்தகை நியமனம்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.செல்வப்பெருந்தகையை நியமித்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவராக கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கேஎஸ் அழகிரி அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
மரியாதைக்குரிய காங்கிரஸ் தலைவர் அவர்கள், செல்வப்பெருந்தகையை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமித்துள்ளார். தலைமை பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படும் கே.எஸ் அழகிரி இதுவரை அளித்த பங்களிப்புக்கு பாராட்டுகள். இதனுடன், காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழுத்தலைவராக ராஜேஷ்குமார் எம்எல்ஏ நியமிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
2019-ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டார். கே.எஸ்.அழகிரி தலைமையில் தான் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 2019 நாடாளுமன்ற தேர்தலையும், 2021 சட்டமன்ற தேர்தலையும் அதன் பிறகான உள்ளாட்சி தேர்தல்களையும் சந்தித்து வெற்றி பெற்றது
Tags: தமிழக செய்திகள்
