விஜயகாந்த் உயிரிழக்க காரணம் என்ன? மியாட் மருத்துவமனை அறிக்கை முழு விவரம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் இன்று மரணமடைந்தார், அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது
கடந்த நவம்பர் 18ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மார்புசளி, இடைவிடாத இருமலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இந்த சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இதனால் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வீண் வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் அறிவித்தார். இதை தொடர்ந்து டிசம்பர் 11ஆம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பினார். இதையடுத்து விஜயகாந்த்.உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் கடந்த 26ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்படுகிறது. என தேதிமுக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது இந்நிலையில் மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:-
அதில் மருத்துவ நிலை அறிக்கை திரு. கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நுரையீரல் அழற்சி (pneumonia) காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை பெற்றிருந்தார். மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் அவர் இன்று காலை 28 டிசம்பர் 2023 காலமானார் என அறிக்கை வெளியிட்டுள்ளது
தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி அதிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2006 முதல் 2016 வரை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவராகவும் இருந்தார்.
விஜயகாந்த் மறைவினை அடுத்து தேமுதிக கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
