நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை
நடிகை ஜெயப்பிரதாவுக்கு சிறை தண்டனை
- பிரபல நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!
- ஜெயப்பிரதா நடத்தி வந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான ESI தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என தொழிலாளர்கள் புகார் அளித்து, அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு
ஆந்திரப்பிரதேச மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்தவர் நடிகை ஜெயப்பிரதா. கே.பாலச்சந்தர் 1976ம் ஆண்டு இயக்கிய மன்மத லீலை படத்தில் கமலுடனும் நடித்திருந்தார். இதுவே இவரின் தமிழ் அறிமுக படமாகும். 1979ல் கே.பாலச்சந்தர் இயக்கிய கமல் - ரஜினி காம்போவில் வெளிவந்த நினைத்தாலே இனிக்கும் படத்திலும் நடித்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து அரசியல் பிரவேசம் செய்த ஜெயப்பிரதா தொடர்ந்து இரண்டு முறை லோக் சபாவிற்கும், ஒரு முறை ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
ஜெயப்பிரதா சென்னையைச் சேர்ந்த ராம் குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து, அண்ணா சாலையில் அவரின் பெயரிலேயே தியேட்டர் ஒன்றை நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் வசூலிக்கப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை.
இது தொடர்பாக, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து, ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
