Breaking News

தந்தையின் குடிப்பழக்கத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 16 வயது சிறுமி முழு விவரம்

அட்மின் மீடியா
0

தந்தையின் குடிப்பழக்கத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுமி





வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சின்னராஜாகுப்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி விஷ்ணுப்பிரியா என்பவர் தனது தந்தையின் குடிப்பழக்கத்தால் மன உளைச்சலுக்கு ஆளானதுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தற்கொலைக்கு முன்பாக என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை ’’என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்த வேண்டும் எனது குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போது காண்பேனோ, அப்போது தான் எனது ஆன்மா அமைதியடையும்” என்று கடிதம் எழுதியுள்ளார்

தேமுதிக தலைவர் விஜயகாந்த வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வேலூர் மாவட்டம் சின்ன ராஜா குப்பம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி விஷ்ணு பிரியா, தந்தையின் குடிப்பழக்கத்தால் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் மதுவால் தினம் தினம் சீரழிந்து வருகின்றன. மதுவிலக்கை அமல்படுத்த வேண்டிய தமிழக அரசோ தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து இளைய சமுதாயத்தின் பாதையை மாற்றி அழிவின் விளிம்பிற்கு கொண்டு செல்கிறது. மேலும் சட்டவிரோத மது விற்பனையால் மோதல்களும், கொலைகளும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. டாஸ்மாக் கடைகளை மூடாமல், ஒவ்வொரு மதுபாட்டில் மீது 10 ரூபாய் கூடுதலாக விற்பது குறித்தும், டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்தும் கேள்வி எழுப்பும் செய்தியாளர்களை பார்த்து நீங்கள் குடிக்கிறீர்களா என தமிழக அமைச்சர்கள் பொறுப்பில்லாமல் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுபாட்டில்களில் மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்ற வாசகத்தின் கீழ், தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி விஷ்ணு பிரியாவின் புகைப்படத்தை ஒட்டி அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.மேலும் அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பு சிறுமியின் புகைப்படத்தை வைக்க வேண்டும். அந்த புகைப்படத்தை பார்த்தாவது ஒவ்வொரு தந்தையும் மது குடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ; 

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சின்னராஜாகுப்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி விஷ்ணுப்பிரியா, கூலித்தொழிலாளியான தமது தந்தையின் குடிப்பழக்கத்தால் தமது குடும்பத்தின் நிம்மதி குலைந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.தமது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதி வைத்துள்ள அச்சிறுமி, ’’ என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்த வேண்டும் என்பது தான். எனது குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போது காண்பேனோ, அப்போது தான் எனது ஆன்மா அமைதியடையும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். விஷ்ணுப்பிரியாவின் கடிதம் எனது இதயத்தை வாட்டுகிறது.

விஷ்ணுப்பிரியாவின் வேண்டுதல் அவருடையது மட்டுமல்ல.... தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான பதின்வயது குழந்தைகளின் மனநிலை இது தான். தமிழ்நாட்டிலுள்ள 90 விழுக்காடு குடும்பங்கள் ஏதோ ஒரு வகையில் மதுவால் பாதிக்கப்பட்டுள்ளன. மதுவுக்கு அடிமையானவர்களின் குடும்பங்களில் அமைதி இல்லை. வறுமை... சண்டை.... பசி.... பட்டினி... நோய், மன அழுத்தம், நிம்மதியின்மை ஆகியவை தான் அந்தக் குடும்பங்களை வாட்டுகின்றன. அதன் விளைவு தான் விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டார்.என பதிவிட்டுள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback