Breaking News

வெட்டிக்கொலை செய்யப்பட்ட விஏஓ ரூ.1 கோடி நிவாரணம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி தமிழக முதல்வர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் எனும் 55வயது மதிக்கத்தக்க அரசு ஊழியரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து வெட்டியுள்ளனர்.இதனையடுத்து, படுகாயமுற்ற பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்துள்ள நிலையில், மீதமுள்ள குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அவர்கள் கூறுகையில், விஏஓ வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெறுகிறது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கி தரப்படும் என தெரிவித்தார்

இந்நிலையில் பணியிலிருந்தபோது தாக்கப்பட்டு மரணமடைந்த தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் திரு. லூர்து பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒருகோடி ரூபாய் நிதியுதவி; கருணை அடிப்படையில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி அளிக்கப்படும் என  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரியும் திரு. லூர்து பிரான்சிஸ் (வயது 53) த/பெ. திரு.யேசுவடியான், என்பவரை இன்று மதியம் அவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது இரண்டு நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். தலை மற்றும் கைகளில் பலத்த காயமுற்ற திரு. லூர்து பிரான்சிஸ் அவர்கள் அவசர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். 

இவரைத் தாக்கிய இரு நபர்களில் ராமசுப்பு என்பவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையின்படி, ராமசுப்புவின் மீது திரு.லூர்து பிரான்சிஸ், கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், கடந்த வாரம் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், ஆத்திரம் அடைந்த ராமசுப்பு மற்றொரு நபரை அழைத்துக் கொண்டு அவரை வெட்டியதாகத் தெரிய வருகிறது. இதுகுறித்து, காவல் துறையின் மூலம் உரிய மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.

திரு. லூர்து பிரான்சிஸ், கிராம நிர்வாக அலுவலர் பணியிலிருக்கும்போது வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நமக்கெல்லாம் மிகுந்த துயரத்தினை அளித்துள்ளது. தம் கடமையை முறையாக நிறைவேற்றி, அதன் காரணமாக உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்புணர்வையும், கடமை உணர்ச்சியையும் தமிழ்நாடு அரசு போற்றுகின்றது. 

இக்கொடிய சம்பவத்தில் உயிரிழந்த திரு. லூர்து பிரான்சிஸ் அவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், திரு. லூர்து பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback