பீஹார் பாஜகவுடன் கூட்டணி முறிவு- முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதீஷ் குமார்
பிகார் மாநிலத்தில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டில் நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி பெரும்பான்மை பலம் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் 43 இடங்களில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது.ஆனால், நிதிஷ் குமாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆட்சி, அதிகாரத்தில் பாஜகவின் கை ஓங்கி இருந்தது. இதன் காரணமாக ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
மேலும் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கும் பாஜக மேலிடத்திற்கும் அண்மைக்காலமாக மோதல் ஏற்பட்டு வந்தது பாஜக ஏற்பாடு செய்யும் ஆலோசனைக் கூட்டங்களையும் பிரதமர் மோடியுடனான சந்திப்பையும் கடந்த சில மாதங்களாக நிதிஷ் குமார் தவிர்த்து வருகிறார். குறிப்பாக குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா முதல் நிதி ஆயோக் கூட்டம் வரை, 3 வாரங்களில் மத்திய அரசின் நான்கு முக்கிய நிகழ்ச்சிகளை நிதிஷ் குமார் புறக்கணித்தார்.இதனால், பாஜக உடனான கூட்டணியில் இருந்து அவர் வெளியேற உள்ளதாக கூறப்பட்டு வந்தது
இந்நிலையில் பிஹார் மாநில முதல்வரும், ஜேடியு தலைவருமான நிதிஷ் குமார் இன்று தனது கட்சி எம்எல்ஏக்களுடன் பாட்னாவில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில், ஜேடியு - பாஜக கூட்டணி முறிந்துவிட்டதாக முறைப்படி அறிவித்தார்
மேலும் இந்தக் கூட்டத்தில் நிதிஷ் குமார் பேசும்போது, பாஜக எப்போதுமே ஐக்கிய ஜனதா தள தலைவர்களை அவமதித்து வந்ததாகவும், தங்கள் கட்சியை பல்வீனமாக்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் குற்றம் சாட்டினார்.
தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் கைகோத்துள்ள நிதிஷ் குமார், 161 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் இன்று மாலை ஆளுநரை சந்திக்கவுள்ளார்.புதிய அரசில் நிதிஷ் குமார் முதல்வராகவும், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் இருப்பார் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு சட்டப்பேரவை சபாநாயகர் பதவி ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது
தற்போது பீஹார் சட்டமன்ற பலம் -243
பாஜக 77 உறுப்பினர்கள்
ஐக்கிய ஜனதா தளம் 45 உறுப்பினர்கள்
லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 80 உறுப்பினர்கள்
காங்கிரஸ் 19 உறுப்பினர்கள்
மற்ற கட்சிகள் 9 உறுப்பினர்கள்
இடதுசாரிக் கட்சிகளுக்கு 16 உறுப்பினர்கள்
தேர்தலுக்கு பிறகு ஒவைசியின் 4 எம்எல்ஏக்கள் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Tags: இந்திய செய்திகள்
