கட்சியை அடாவடியாக, சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்க முடியாது , தர்மத்தை நம்பினேன்- ஓபிஎஸ் அறிக்கை
அட்மின் மீடியா
0
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை - 17-08-2022
தர்மத்தை
நம்பினேன்; மாட்சிமைமிக்க நீதிமன்றங்களை நம்பினேன்; கழகத்தை உயிராக
நேசிக்கும் கழகக் கண்மணிகளை, தொண்டர்களை நம்பினேன்; உண்மையும், தர்மமும்
என் பக்கம்தான் இருக்கிறது என்பதை உளமார் நம்பிய தமிழ்நாட்டு மக்களை
நம்பினேன்; இவையாவிற்கும் மேலாக, தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த
அப்பழுக்கில்லாத இயக்கத்தை தோற்றுவித்து, வளர்த்தெடுத்து, பாதுகாத்து,
தங்களது ஆயுளையே அர்ப்பணித்த இயக்கத்தின் காவல் தெய்வங்களான புரட்சித்
தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது ஆசிகளை
நம்பினேன். இந்த நம்பிக்கை இன்றைக்கு உண்மையாகி இருக்கிறது.
அடுத்தவர்
வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக, சட்டத்திற்குப்
புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், பொதுமக்களும்,
குறிப்பாக தெய்வமும் ஏற்றுக்கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்து
இருக்கிறது.
கழக நிறுவனர் புரட்சித் தலைவர்
அவர்கள் வகுத்தெடுத்த விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்
என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இனி, கழகத்தின் ஒற்றுமை
நிலைநிறுத்தப்பட்டு, அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அனைத்திந்திய அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகம் திகழும், வெற்றி நடைபோடும் என்பது திண்ணம்.
ஓர்வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே”
என்னும்
மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்
திருமந்திரத்தை இதயப்பூர்வமாக ஏற்று, கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர்
என்றைக்கும் நம் இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா
அவர்கள்தான் என்னும் உணர்வு கொண்ட ஒன்றரை கோடி தொண்டர்களையும் அரவணைத்துச்
செல்வேன்.கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும்.
அண்ணா நாமம் வாழ்க!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க!
புரட்சித் தலைவி அம்மா நாம் வாழ்க!
என்றும் அன்புடன்,
ஓ. பன்னீர்செல்வம் கழக ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்
Tags: தமிழக செய்திகள்

