மின் கட்டணத்தை உயர்த்த இடைக்கால தடை- மதுரை உயர்நீதி மன்றம்
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினரை நியமிக்கும் வரை தமிழ்நாடு மின்வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாச்சலம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே உள்ளனர். சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் இல்லை.இந்நிலையில் தமிழகத்தின் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில், தமிழ்நாடு மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது
இந்த மனுவை ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு ஏற்று, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் மட்டும் இருக்கும் நிலையில் ஒழுங்குமுறை ஆணையம் கூடியது சட்டவிரோதம் என்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை மின் கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி G.R. சுவமிநாதன், முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை தமிழ்நாடு மின்வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்கப்படுகிறது.
இந்த தடை உத்தரவு சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை தொடரும். அதே நேரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம். மனுதார்கள் தங்களின் ஆட்சேபனைகளை ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
Tags: தமிழக செய்திகள்
.jpg)