மகாராஷ்டிரா மாநில பள்ளி புத்தகத்தில் இடம் பெற்ற புதுக்கோட்டை மாணவி... முழு விவரம்
புதுக்கோட்டை மாவட்டம், திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர் பி.ஏ. வரலாறு படித்து வருகிறார். இவர் புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்தபோது அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்று நாசாவை பார்வையிட தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் அதற்கான பயணச்செlலவிற்க்கு பலரும் உதவி செய்தனர். மேலும் அதற்கான முழு தொகையும் கிராமலாயா என்ற தொண்டு நிறுவனம் வழங்க முன் வந்தது. அப்போது தனக்கு தேவையான தொகை கிடைத்து விட்டது என்று தொண்டு நிறுவனத்திடம் மாணவி கூறினார்.
இதையடுத்து தொண்டு நிறுவனம் வேறு ஏதாவது உதவி வேண்டும் என்றால் கேளுங்கள் என்றதும், மாணவி எங்கள் ஊரில் கழிவறை இல்லாமல் மக்கள் மிகவும் கஷ்டபடுகின்றார்கள் கழிவறை கட்டிக் கொடுங்கள் என்று கூறினார். இதையடுத்து கிராமலாயா தொண்டு நிறுவனம் 126 வீடுகளுக்கு கழிவறை கட்டி கொடுத்தது. இதனால் இந்த மாணவியை பலரும் பாராட்டினர்
இந்நிலையில் ஜெயலட்சுமியின் இத்தகைய செயல்பாடுகள் குறித்து மஹாராஷ்டிரா மாநிலத்தில் 7-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் கனவு மெய்ப்படும் எனும் தலைப்பில் நான்கு பக்கத்தில் இதுசம்பந்தமான பாடம் இடம்பெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவியின் சமூக அக்கறையானது மராட்டிய மாநிலத்தில் பாடமாக அமைந்திருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்