10 மாத குழந்தைக்கு இந்திய ரெயில்வேயில் வேலை... காரணம் என்ன முழு விவரம்
இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக 10 மாத குழந்தைக்கு இந்திய ரெயில்வேயில் பணி வழங்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரகுமார் விலாய் பகுதியில் ரெயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார் கடந்த வாரம் வாகன விபத்தில் ராஜேந்திரகுமாரும், அவரது மனைவியும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இவர்களது 10 மாத குழந்தை ராதிகா யாதவ் உயிர் பிழைத்தது.
அரசு ஊழியர்கள் தங்களின் பணிக்காலத்தில் இயற்கைக்கு மாறான வகையில் உயிரிழக்கும்பட்சத்தில், அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, கல்வித்தகுதிக்கு ஏற்ப கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும். இது வழக்கமான நடைமுறைதான் என்றாலும்,
சத்தீஸ்கர் மாநிலத்தில் நிகழ்ந்திருக்கும் இதுபோன்றதொரு நிகழ்வு சுவாரஸ்யத்துடன் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம், 10 மாதக் குழந்தைக்குக் கிடைத்திருக்கும் அரசுப் பணி.
தற்போது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வரும் 10 மாத குழந்தையான ராதிகா யாதவுக்கு தன் தந்தையின் பணி வழங்கப்பட்டு உள்ளது. சிறிய குழந்தை என்பதால் அதன் கைரேகையைப் பதிவுசெய்து பணி நியமனம் உறுதிபடுத்தப்பட்டது. குழந்தை 18 வயதை பூர்த்தி செய்ததும், சுய விருப்பத்தின் அடிப்படையில் பணிக்கு சேரலாம் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags: இந்திய செய்திகள்