Breaking News

மீண்டும் அதிகரிக்கும் கொரானா...தமிழக முதல்வர் வழங்கிய அறிவுரைகள்... முழு விவரம்...

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரானா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. மூன்றாம் அலை முடிவுக்கு வந்த பின்னர் பாதிப்பு குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.வழக்கம் போல் அனைத்துப் பணிகளும் தடையின்றி நடைபெற்று வந்தது. இந்நிலையில் திடீரென பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை மேற்கொண்டார்.இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முதலமைச்சர் முக ஸ்டாலின் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவுறுத்தியுள்ளார். 

அதன்படி,கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளை கண்காணிக்க வேண்டும் என்று கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.இதன் மூலம் தமிழகத்தில் முகக்கவசம் அணிவது அவசியமாகியுள்ளது.மேலும் கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்

தமிழ்நாடு அரசின் பன்முக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்திய அளவில் பல மாநிலங்களில் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் மீண்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டு வந்தாலும், தமிழ்நாட்டில் பதிவாகும் கரோனா தொற்றின் எண்ணிக்கை குறைவாகவே உயர்ந்துள்ளது.இதன் தாக்கத்தைக் குறைத்திட சுகாதாரத் துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

 பெருநகர சென்னை மாநகராட்சியைத் தொடர்ந்து, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காணப்படுகிறது. சென்னைப் பகுதியில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் கோவிட் தாக்கம் காணப்பட்டது. இவை அனைத்தும், நிறுவனங்களின் உதவியுடன் அனைவருக்கும் முழுமையாக பரிசோதனை செய்தும், கோவிட் தாக்கம் இருந்தவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளித்தும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தமிழக முதல்வர், இந்த ஆய்வின்போது, கீழ்க்கண்ட அறிவுரைகளை வழங்கினார்

தமிழகத்தில் இதுவரை கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டாலும், இதனை மேலும் உயராமல் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்கவேண்டும் என்றும், கரோனா கட்டுப்பாட்டுப் பணிகளை சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை போன்ற துறைகளை ஈடுபடுத்தி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பணி செய்யும் இடங்கள், திருவிழாக்கள், திருமணங்கள், கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மக்களிடையே ஒருசிலர் கோவிட் தொற்றால் பாதிக்கப்படும்போது, இவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்து, தொடர் கண்காணிப்பு செய்து, உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடித்திடவும், போதிய பரிசோதனைகள், தொடர் கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை முறையாக பின்பற்றிட பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழக முதல்வர் அறிவுறுத்தினார்.

தடுப்பூசி ஒன்றே கரோனாவை வெல்லும் ஆயுதம் என்பதால், மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது.இதுவரை 93.82 விழுக்காடு நபர்கள் முதல் தவணை தடுப்பூசியும், 82.94 விழுக்காடு நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர்.தமிழ்நாட்டில் 43 இலட்சம் நபர்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 1.20 கோடி நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியும், என மொத்தம் 1.63 கோடி நபர்கள் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டியுள்ளது. 

எனவே, தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கி, அவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலையை உருவாக்கிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.





Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback