Breaking News

அதிமுக பொதுக்குழுவிற்கு நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு- மனு தள்ளுபடி

அட்மின் மீடியா
0

சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளரான சி.பாலகிருஷ்ணன் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.


அந்த மனுவில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உட்கட்சி தேர்தலில் அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட போதிய அவகாசம் வழங்கவில்லை. கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பொதுக்குழு கூட்டம் நடத்துவது தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.


அதேபோல் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுவுக்கு, கட்சி விதிகளை திருத்துவதற்கு தடை கோரியும் கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன்,சுரேன் பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு காரசாரமான விவாதத்தை முன்வைத்து வருகிறது.

அதிமுக பொதுக்குழுவு கூட்டம் நாளை ( ஜுன் 23 ) நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழுவுக்கு தடை கோரி கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று பிற்பகல் 3 மணியளவில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், ''பொதுக்குழு அஜெண்டா இதுவரை வெளியிடப்படவில்லை. ஜெயலலிதா மறைந்த பிறகு பொதுச்செயலாளர் பதவிக்கு மாற்றாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. கட்சியினரிடம் கலந்தாலோசனை இல்லாமலேயே ஒற்றைத் தலைமை விவாதங்கள் தொடங்கியுள்ளன. 

ஐந்து ஆண்டு பதவிக்காலம் உள்ளபோது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கிவிட்டு, பொது செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர உள்ளதாக தெரிகிறது. ஒற்றைத் தலைமை குறித்து செயற்குழுவும் எதுவும் பேசவில்லை. பொதுச்செயலாளராக யாரையும் தேர்வு செய்ய முடியாது. தற்போது ஒற்றைத் தலைமை என திருத்தம் கொண்டு வர உள்ளனர். பொதுக்குழு வழக்கமான முறையில் நடத்த ஆட்சேபனை இல்லை. ஆனால் தலைமையை மாற்றுவது தொடர்பான திருத்தங்களை மேற்கொள்ளக்கூடாது'' என்று வாதிட்டார். மேலும்அதிமுக தீர்மானக்குழு தயாரித்து அனுப்பிய 23 வரைவு தீர்மானங்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக ஓ.பி.எஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது


ஓபன்னீர் செல்வம் தரப்பு வாதம்

பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொள்வார்

23 தீர்மானத்திற்கு ஓபிஎஸ் ஒப்புதல், இது தவிர வேறு எதையும் முடிவு எடுக்கக் கூடாது

ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க கூடாது

பொதுச் செயலாளராக யாரையும் தேர்வு செய்ய முடியாது

கட்சி விதிகளுக்கு முரணாக செயல்பட மாட்டோம்

நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு தகவல்


எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம்

பொதுக்குழுவிற்கான நோட்டீஸ் ஜூன் 2ஆம் தேதியே கொடுக்கப்பட்டுள்ளது

இதுவரை பொதுக்குழு, செயற்குழு அஜெண்டாக்கள் வெளியிடப்பட்டது இல்லை

பொதுக்குழுவுக்கு விதிகளை திருத்தம் செய்ய அதிகாரம் உள்ளது 

கொள்கைகளை உருவாக்குவது உள்ளிட்ட அனைத்திற்கும் பொதுக்குழுவுக்கே அதிகாரம் எந்த விதியையும் சேர்க்கவோ, நீக்கவோ 2665 உறுப்பினர்கள் கொண்ட பொதுக்குழுவால் முடியும் 

பொதுக்குழுவில் இது நடக்கும், இது நடக்காது என உத்தரவாதம் அளிக்க முடியாது

பொதுக்குழுவில்தான் உறுப்பினர்களின் விருப்பம் அறிவிக்கப்படும் இது ஜனநாயக நடைமுறை

பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கூடாது பொதுக்குழு தான் உச்சபட்ச அமைப்பு -தனித் தீர்மானத்தை பொதுக்குழுவில் கொண்டு வரலாம் 

இந்த நிலையில், இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து அதிமுக பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்தலாம் என்றும், அதிமுக பொதுக்குழுவுக்கு எந்த நிபந்தனையும் இல்லை என்றும், கட்சி விதிகளை திருத்த தடையில்லை என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்சி விதிகளை திருத்த தடையில்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளதால் நாளை வானகரத்தில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback