சேலம் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் அனைவருக்கும் ஆயுள் தண்டனை...முழு விவரம்...
சேலம் மாவட்டம் ஓமலுரை சேர்ந்த பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜும் நாமக்கல்லைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணும் நட்பாக பழகினர்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற கோகுல்ராஜ், இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர்.
அதனை
அடுத்து நாமக்கல்லில் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக சடலமாக
கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தீரன் சின்னமலைக்
கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17
பேருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும்
கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கினை நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரித்த நிலையில், கோகுல்ராஜின் தாய் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் மார்ச் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் இறந்துவிட்டதால் எஞ்சிய 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனையும்,
மற்றொரு முக்கிய குற்றவாளியான அருண் என்பவருக்கும் 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதே போல் குமார், சதிஸ்குமார், ரகு, ரஞ்சித் செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனையும் மற்றொரு குற்றவாளியான சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
பிரபு மற்றும் கிரிதர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, 5 வருட கடுங்காவல் தண்டனையும் மற்றும் தலா ரூ.5ஆயிரமும் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்