BREAKING : நகைக்கடன் தள்ளுபடிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு -அமைச்சர் அறிவிப்பு..!
நகை கடன் தள்ளுபடி சலுகை பெற மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும் சரியான விவரங்களை அளித்தால் பின்னர் சரி பார்க்கப்பட்டு ஆய்வின் அடிப்படையில் கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார்.
தமிழக அரசின் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
திமுக ஆட்சி அமைந்த உடன் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும் நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்து தகுதியான நபர்களை கண்டறிவதற்காக கடந்த ஒரு மாத காலம், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக் கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண்,முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களை சேகரித்து, தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யவும் நகைக்கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய அறிவுரைகள் வழங்கி கூட்டுறவுத்துறை உத்தரவிட்டது.
அதில் 2021ஆம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி பெற்றவர்கள், குடும்ப அட்டையின் படி இடம்பெற்றுள்ள குடும்பத்தினர் நகை கடன் தொகை முழுமையாக செலுத்தியவர்கள், 40 கிராமுக்கு மேற்பட்ட நகை கடன் பெற்ற குடும்பத்தினருக்கு தள்ளுபடி செய்யப்படாது என அறிவிக்கப்பட்டது
மேலும் 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன் பெற்றவர்கள், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்,
குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள், ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள் ,
எந்த பொருளும் வேண்டாத குடும்பத்தினர்,
ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்கு கூடுதலாக பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோருக்கு நகைக்கடன் தள்ளுப்படி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நகைக்கடன் தள்ளுபடி பெற மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக வழங்காததால் அதனை சரியாக அளித்தால் ஆய்வு செய்து, நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக அளிக்க இயலாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும். பின்னர் அவை சரிபார்த்து ஆய்வின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படும்.
குடும்ப அட்டை, ஆதார் விவரங்கள் சரியாக இல்லையென தெரிவித்து நிராகரிக்கப்பட்ட நபர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்