தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் நடிகர் விஜய் மேல்முறையீடு!
வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய வழக்கில் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.நடிகர் விஜய்
2012ல் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்து வாங்கியிருந்தார். அந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாததோடு, வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் அவர் பதிவு செய்யவில்லை.
இந்த நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட அந்த காருக்கு உரிய வரியைச் செலுத்தும்படி வணிக வரித் துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த கார் பதிவு செய்யப்படவில்லை என்பதால், அது பயன்படுத்தப்படுவதில்லை என்று கூறிய நடிகர் விஜய், அந்தக் காருக்கான வரியை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மனுதாரர் தான் எந்தத் தொழில் செய்கிறோம் என்பதை மனுவில் குறிப்பிடவில்லை எனக் கேள்வி எழுப்பினார். அப்போது நடிகர் விஜய் தரப்பில், தான் தமிழ் சினிமாவில் நடிகராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நடிகர் விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
இந்த அபராதத்தை இரண்டு வாரத்திற்குள் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்குச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சினிமா நடிகர்கள் உரிய நேரத்தில் தங்களது வரியைச் செலுத்த வேண்டும் என்றும் அந்த வரி வருவாயின் மூலமாகத்தான் நாட்டில் பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் நீதிபதி கூறினார்.
வரி என்பது கட்டாயமாகச் செலுத்த வேண்டிய ஒன்று என்றும் விரும்பினால் செலுத்தக்கூடிய நன்கொடை அல்ல என்றும் கூறிய நீதிபதி, தான் ஒரு நடிகர் என்பதையே மனுவில் விஜய் குறிப்பிடவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
சமூக நீதிக்குப் பாடுபடுவதாகச் சொல்லிக்கொள்ளும் நடிகர்கள், வரியைச் செலுத்தாமல் இருப்பது ஏற்றக்கொள்ளக்கூடியதல்ல என்று தெரிவித்த நீதிபதி, நடிகர்கள் 'ரீல் ஹீரோக்கள்' ஆக இல்லாமல் 'ரியல் ஹீரோக்கள்' ஆக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
வரி ஏய்ப்பு என்பது தேச துரோகத்துக்கு சமம் என்று குறிப்பிட்ட நீதிபதி, இரண்டு வாரங்களுக்குள் அபராதத்தையும் உரிய வரியையும் விஜய் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், நடிகர் விஜய் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் தன்மீதான தனிப்பட்ட விமர்சனங்களை நீக்கக்கோரியும் மேல்முறையீடு மனுவில் கூறியுள்ளார்.இந்த மனு, வரும் நாளை மறுநாள்ள (ஜூலை 19) விசாரணைக்கு வரவுள்ளது.
Tags: தமிழக செய்திகள்