அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டியை வைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாலியல் தொல்லைப் பற்றி மாணவர்கள் அச்சமின்றித் தெரிவிக்க அனைத்துப் பள்ளிகளிலும் குழு அமைக்க வேண்டும் என்றும் மேலும் அந்த குழுவில் சமூக நலத்துறை அதிகாரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு செயலர், எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத பெண் காவல் அதிகாரி உள்ளிட்டோர் குழுவில் இடம் பெற வேண்டும். என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சேலம் மாவட்டத்திலுள்ள சிஎஸ்ஐ தேவாலய வளாகத்தில் குடியிருக்கும் மத போதகர் எஸ்.ஜெயசீலன், அந்த வளாகத்தில் இயங்கி வரும் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த 12 வயது மாணவியை வீட்டிற்கு அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சேலம் மகளிர் நீதிமன்றம், போதகர் ஜெயசீலனுக்கு 5 ஆண்டுகள் சிறை தாண்டனையும், 25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயசீலன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், 12 வயது மாணவியிடம் மத போதகர் ஜெயசீலன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தண்டனை உறுதி செய்தும் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்தார்.
மேலும் அனைத்து பள்ளிகளிலும், சமூக நலத்துறை அதிகாரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர், எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத பெண் காவல் அதிகாரி, மாவட்ட கல்வி அலுவலர், உளவியல் பெண் நிபுணர், அரசு மருத்துவர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டுமென தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளார்.
மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில், மாவட்ட கல்வி அலுவலர் மாதம் ஒருமுறை பள்ளிகளுக்கு சென்று மாணவிகளின் புகார்களை கேட்டறிய வேண்டுமெனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளர். சுதந்திரமாக புகார் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகளை அமைக்க வேண்டும் என நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்