சமையல் எண்ணெய் சில்லறை விற்பனைக்குத் தடை: மதுரைக்கிளை உத்தரவு
சில்லறையாக சமையல் எண்ணெயை விற்பனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை செய்துள்ளது.
பேக்கிங் செய்யாத சமையல் எண்ணெய் விற்பனைக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மீறி சமையல் எண்ணெய்கள் தயாரிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கின் விசாரணையில், சமையல் எண்ணெயின் தரத்தை ஆய்வு செய்வதற்காக எத்தனை ஆய்வகங்கள் உள்ளன,
எண்ணெய்யில் கலப்படம் செய்வோர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எண்ணெய்யை பாக்கெட்டில் அடைக்காமல் விற்கக்கூடாது என்று 2011ம் ஆண்டு உணவு பாதுகாப்பு சட்டம் கூறியது. சட்டப்படி தடை இருந்தும் பாக்கெட்டில் அடைக்காமல் எண்ணெய் விக்க அனுமதித்தது ஏன் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதில் விதிகளை மீறியதாக எத்தனை வழக்குகள் உள்ளன என்ற விவரங்களை மாவட்ட வாரியாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் சமையல் எண்ணெயை சில்லறையாக விற்பனை செய்யக்கூடாது என்றும் பேக்கிங் செய்த சமையல் எண்ணெய்களையே விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கினை ஜனவரி 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
