3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்;
அட்மின் மீடியா
0
நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்;
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
தென்மேற்கு பருவ காற்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தீவிரம் அடைந்துள்ளதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலைச்சரிவு பகுதிகளில் ஒருசில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய அதி கன மழையும், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும்,
சேலம், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 36 செ.மீ மழையும், அவலாஞ்சி மற்றும் கூடலூர் பஜாரில் 35 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.மீனவர்களுக்கு
எச்சரிக்கை:இன்று குமரிக் கடல், வடகிழக்கு அரபிக்கடல், மகாராஷ்டிர- குஜராத் கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள- கர்நாடக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45-55 கிமீ என்ற அளவில் காற்று வீசக்கூடும்.அதேபோன்று அடுத்த நான்கு நாள்களுக்கு கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை உயர் கடல் அலைகள் 3.5மீ இருந்து 4.2மீ உயரம் வரை எழும்பக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்