காஷ்மீர் மாநிலம் இன்றுமுதல் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிந்தது
அட்மின் மீடியா
0
காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிந்தது - இன்று முதல் அமலுக்கு வந்தது.
துணைநிலை கவர்னர்கள் இன்று பதவியேற்பு
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.
இந்த சட்டம் நிறைவேறி சுமார் 3 மாதங்கள் ஆன நிலையில், காஷ்மீர் தொடர்பான நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி காஷ்மீர் இனிமேல் மாநிலம் இல்லை. அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிந்துவிட்டது.
இதில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு துணை நிலை கவர்னராக கிரிஷ் சந்திரா மர்மு மற்றும் லடாக் யூனியன் பிரதேச துணை நிலை கவர்னராக ஆர்.கே.மாத்தூர் ஆகியோரை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அவர்கள் இருவரும் இன்று பதவியேற்கின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு புதுச்சேரியில் இருப்பது போல சட்டசபை இருக்கும். அங்கு போலீஸ் மற்றும் சட்டம்-ஒழுங்கு போன்றவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். நிலம் மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் வசம் இருக்கும்.
அதேநேரம் லடாக் யூனியன் பிரதேசம், சட்டசபை இன்றி செயல்படும். அங்கு ஆட்சி முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
ஒரு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
Tags: முக்கிய செய்தி