Breaking News

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் செய்யலாம் மாநில தேர்தல் ஆணையம் திடீர் உத்தரவு!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் வருகின்ற பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.இதன்காரணமாக,தேர்தல் பரப்புரை பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.


கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு காலை 8 மணிக்கு முன்னதாகவும்,இரவு 8 மணிக்கு மேல் பரப்புரை செய்யக்கூடாது என்ற உத்தரவு அமலில் இருந்த நிலையில்,தற்போது பரப்புரைக்கான நேரம் நீட்டிக்கப்பட்டு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும்,தேர்தல் பிரச்சாரத்திற்காக மேற்கொள்ளப்படும் சாலை நிகழ்ச்சிகள், பாதயாத்திரை, சைக்கிள் பேரணி மற்றும் ஊர்வலங்கள் ஆகியவற்றிற்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தடைக்கு தளர்வு அளிக்கப்படுகிறது. 

மாதிரி நடத்தை விதிகளில் கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி உரிய அலுவலரிடம் அனுமதி பெற்று மேற்கண்ட நிகழ்வுகளை மேற்கொள்ள உரிய அனுமதி வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அரசியல் கட்சிகளின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு முன்கூட்டியே தெரிவித்து, அவரது ஒப்புதலை பெற்று பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது..

பரப்புரையின் போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர்,வேட்பாளர்கள் மற்றும் பொது மக்கள் கடைபிடிப்பதை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback