விபி-ஜி ராம் ஜி 125 நாள் வேலை திட்டம் இன்று முதல் அமல் - தமிழக அரசு ஆணை
விபி-ஜி ராம் ஜி 125 நாள் வேலை திட்டம் இன்று முதல் அமல் - தமிழக அரசு ஆணை
மத்திய அரசு கிராமப்புற மக்களுக்காக செயல்படுத்தி வந்த '100 நாள் வேலை' திட்டம் (MGNREGA), 'விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத இயக்கம்' (VB-G RAM G) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வேலை நாட்கள் 100-ல் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டு நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் இதற்கு ரூ.12,642 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
இப்புதிய திட்டத்தின் முதற்கட்டச் செயல்பாட்டிற்காக மத்திய அரசு இடைக்கால நிதியாக ரூ. 95,692 கோடி தொகையை வாரி வழங்கியுள்ளது. இவ்வளவு பெரிய நிர்வாக மாற்றத்தின்போது மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மிகக் கவனமாக உள்ளது.
புதிய 'கிராமின் ரோஜ்கார் உத்தரவாத அட்டைகள்' (Gramin Rozgar Guarantee Cards) பயனாளிகளுக்குக் கிடைக்கும் வரை, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இ-கேஒய்சி (e-KYC) சரிபார்க்கப்பட்ட பழைய வேலை அட்டைகளே செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வேலைவாய்ப்பில் தொய்வு ஏற்படாது.ஊழல் மற்றும் இடைத்தரகர்களின் தலையீட்டைத் தவிர்க்க, வாராந்திர அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறை தொழிலாளர்களின் வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குகளில் 'நேரடிப் பணப்பரிமாற்றம்' (Direct Benefit Transfer) மூலம் ஊதியம் நேரடியாகச் சென்றடையும்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசுடன் உடனுக்குடன் இணைக்க 100-க்கும் மேற்பட்ட சிறப்பு மண்டல அதிகாரிகள் (Zonal Officers) நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு திட்டத்தைக் கண்காணிப்பார்கள்.இப்புதிய திட்டத்தின் ஆகச்சிறந்த சிறப்பம்சமே இதில் புகுத்தப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள் தான். முறைகேடுகளை முற்றுப்புள்ளியாக ஒழிக்க மத்திய அரசு டிஜிட்டல் ஆயுதங்களைக் கையில் எடுத்துள்ளது.
போலி வருகைப்பதிவைத் தடுக்க, நாடு முழுவதும் 'முகம் கண்டறியும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை' கட்டாயமாக்கப்படுகிறது.
தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திலிருந்தே அவர்களின் வருகை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும்.
பயனாளிகள் அனைவரின் விபரங்களும் ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி மூலம் 100% துல்லியமாகச் சரிபார்க்கப்படுகின்றன.
வேலைகளின் தரம் மற்றும் உற்பத்தித் திறனைக் கண்காணிக்கப் பிரத்யேக டிஜிட்டல் செயலிகள் மற்றும் இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன..
இதன் மூலம் எந்தக் கிராமத்தில் என்ன வேலை நடக்கிறது என்பதை டெல்லியில் இருந்தபடியே கண்காணிக்க முடியும்.கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு: வெறும் ஏரி, குளம் வெட்டுவதோடு நிற்காமல், கிராமப்புறச் சாலைகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வேளாண் சார்ந்த உள்கட்டமைப்புகளுக்கு இப்புதிய திட்டத்தில் அதிக முக்கியத்துவம் தரப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பை அதிகரிக்கவும், அவர்களுக்கான பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்யவும் சிறப்பு வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன
Tags: இந்திய செய்திகள்
