பொது இடங்களில் கட்சிக் கொடிகள் இருப்பதை ஏற்கமுடியாது மதுரை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவு
பொது இடங்களில் கட்சிக் கொடிகள் இருப்பதை ஏற்கமுடியாது - 12 வாரங்களில் அகற்ற வேண்டும் - மதுரை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவு
விளாங்குடியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சித்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "அதிமுகவின் 53 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு விளாங்குடி பகுதியில் உள்ள அதிமுகவின் பழைய கொடி கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய கொடி கம்பம் அமைக்க அனுமதி வழங்குமாறு மாநகராட்சி அதிகாரிளுக்கு உத்தரவிட வேண்டும்" என கேட்டிருந்தார்.
இதே போல மதுரை, பைபாஸ்ரோடு பேருந்து நிறுத்தம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில் அதிமுக கட்சி கொடிக்கம்பம் அமைக்க அனுமதிக்கக் கோரி மதுரை மாடக்குளம் பகுதியை சேர்ந்த சிலர் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரனை செய்த நீதிபதி இளந்திரையன் பொது இடங்களில் கட்சிகள், இயக்கங்கள், மதங்கள், சாதிகள் சம்பந்தமான கட்சி கொடிகளை வைப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மோதல் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் போக்குவரத்துக்கு இடையூறுகளும் விபத்தும் ஏற்படுகின்றன. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் உருவாகின்றன.
மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதிக உயரங்களிலும் கட்சி கொடி கம்பங்களை அமைத்து வருகின்றனர். இது ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சி மற்றும் இயக்கங்கள், மதரீதியான அனைத்து கொடிக் கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்
Tags: அரசியல் செய்திகள்
