கன்னியாகுமரியில் போலீஸ் சீருடை அணிந்து உதவி ஆய்வாளர் என கூறி சுற்றி திரிந்த போலி பெண் உதவி ஆய்வாளர் கைது
அட்மின் மீடியா
0
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் நிலைய பகுதியில், போலீஸ் சீருடை அணிந்து உதவி ஆய்வாளர் என கூறி சுற்றி திரிந்த போலி பெண் உதவி ஆய்வாளர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியைச் சேர்ந்தவர் சிவா. இவருக்கு ரயில் பயணத்தின் போது சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த அபி பிரபா என்ற இளம்பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டு, இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது.
இவர்கள் காதல் விவகாரம் குறித்து சிவா தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில், சிவாவின் தாயார் தன் மகனை பெண் போலீசாருக்குத் தான் திருமணம் செய்து கொடுப்பேன் என கூறியதால் தனது காதலி அபி பிரபாவிடம், போலீஸ் எஸ்.ஐ., போன்று வேடம் அணிந்து வருமாறு சிவா கூறியுள்ளார்.
காதலனின் பேச்சைக் கேட்டு அபி பிரபா வாடகைக்கு போலீசார் அணிவதைப் போன்று உடை எடுத்துக் கொண்டு, போலீஸ் எஸ்.ஐ. போன்று வேடம் அணிந்தபடியே சிவாவின் தாயாரை நேரில் சந்தித்திருக்கிறார்.
பணி குறித்து சிவாவின் தாயார் கேட்ட போது, அபி பிரபா தான் தாம்பரம் ரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருவதாக சிவாவின் தாயாரிடம் கூறியிருக்கிறார்.
இதனால் அபி பிரபா தனது நண்பரான பிரித்விராஜ் மூலமாக போலீஸ் சீருடை எடுத்து சென்னை திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை போலீஸ் சீருடையில் எடுத்துள்ளார். இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சிவா தனது பெற்றோரிடம் காண்பித்து அவர்களிடம் சம்மதம் பெற்றார்.
இந்நிலையில் 28.10.2024 அன்று நாகர்கோவில் WCC அருகே உள்ள ஒரு பியூட்டி பார்லருக்கு சென்று அங்கு பேசியல் செய்து கொண்ட அபி பிரபா தான் வடசேரி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிவதாக கூறி பணம் கொடுக்காமல் சென்றுள்ளார்.
இதேபோன்று 31.10.2024 மீண்டும் அந்த பியூட்டி பார்லருக்கு பேசியல் செய்ய சென்றுள்ளார். அப்போது சந்தேகம் அடைந்த பூட்டி பார்லர் உரிமையாளர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அங்கு விரைந்து வந்த போலீசார் அபி பிரபாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். திருமணம் செய்ய போலியாக போலீஸ் எஸ்.ஐ. போன்று இளம்பெண் வேடம் அணிந்தது தெரியவந்தது.இதையடுத்து எஸ்.ஐ., போல் வேடமணிந்து ஏமாற்றிய அபி பிரபாவையும், திட்டம் வகுத்துக் கொடுத்த அவரது காதலனையும் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றன
Tags: தமிழக செய்திகள்
