போரூரில் ஷோரூமில் இ-பைக்கின் பேட்டரி வெடித்து தீ விபத்து - 17 பைக்குகள் எரிந்து நாசம்
சென்னை போரூரில், குன்றத்தூர் பிரதான சாலையில் ராஜாராம் என்பவர் இ-பைக் ஷோரூம் நடத்தி வருகிறார். நேற்று இவர் ஷோரூமில் சார்ஜ் போரப்பட்டிருந்த பைக்கின் பேட்டரி வெடித்து தீப்பிடித்துள்ளது. இதைப் பார்த்த ஊழியர்கள் அலறியடுத்துக் கொண்டு கடையை விட்டு வெளியே ஓடினர் ஷோரூமின் முதல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் கரும் புகை வெளியேறி அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. அதற்குள் தீ மளமளவென பரவியது. இதில் 5 புதிய இ-பைக்குகள், மற்றும் சர்வீஸ் செய்வதற்காக வந்த 12 பைக்குகள் என மொத்தம் 17 பைக்குகள் எரிந்து சேதமானது.
மேலும் ஷோரூமிலிருந்த பொருட்களும் தீப்பிடித்து எரிந்து சேதமானது.இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த விருகம்பாக்கம் தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இது குறித்து போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பேட்டரிகளால் இயங்கும் இ-பைக்குகள் சமீப காலமாக தீப்பிடித்து எரிந்து வரும் சம்பவங்கள் வாடிக்கையாளர்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோலுக்கு மாற்றான எலெக்ட்ரிக் வாகனங்கள் பலர் வாங்க நினைத்து வரும் நிலையில் தொடர்ந்து எலக்ட்ரிக் வாகனங்கள் எரிந்து வரக்கூடிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Tags: தமிழக செய்திகள்