வங்கக் கடலில் 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை மையம்
தென்கிழக்கு வங்கக் கடலில் 48 மணி நேரத்தில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் வட மேற்கு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது.
இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இது புயலாகவும் மாறக் கூடும்.காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் 30-ம் தேதி தமிழக கடற்கரையை நோக்கி நகரக் கூடும்.
இதன் காரணமாக டிசம்பர் 1 முதல் 3 வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார். அதேபோல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றால் தென் தமிழகப் பகுதிகளில் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
Tags: தமிழக செய்திகள்