தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை! முழு விவரம்
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் (H1N1) பாதிப்பு அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அவசியமின்றி அச்சப்படத் தேவையில்லை என்றும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் காய்ச்சல் அல்லது H1N1 அறிகுறிகள் தென்பட்டவுடன், தாமதிக்காமல் அருகில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.என அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் H1N1 பன்றிக் காய்ச்சல் பொதுமக்களிடையே தீவிரமடைவதாகச் சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே H1N1 வகை பன்றிக் காய்ச்சல் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதாக தெரிவித்துள்ளது. டெல்லியைத் தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்து வருவதாகப் பொதுச் சுகாதாரத்துறையும் மத்தியச் சுகாதாரத்துறையும் இணைந்து முக்கிய வழிகாட்டுதல்களையும் எச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளன.
குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு 19 ஆக இருந்த நிலையில், தற்போது கிட்டத்தட்ட 339 ஆக உயர்ந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சல் வார்டுகளில் நோயாளிகளின் வருகையும் கணிசமாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
காய்ச்சல், இருமல், தொண்டைவலி, கடுமையான தலைவலி, உடற்சோர்வு மற்றும் பசியின்மை ஆகியவை பன்றிக்காய்ச்சலின் முதன்மை அறிகுறிகள் ஆகும் எனப் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிலருக்கு மூட்டுவலி, தசைவலி, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.
லேசான சளி, காய்ச்சல் அல்லது இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் அதனைச் சாதாரணமாக எண்ணி அலட்சியப்படுத்தக் கூடாது எனவும், எந்தவொரு மருந்தகத்திலும் சுயமாக மருந்து வாங்கி உட்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.அறிகுறிகள் தென்பட்ட உடனே அருகில் உள்ள அரசு அல்லது தனியார் சுகாதார மையங்களை அணுகி உரிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை பெற வேண்டும் என பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
