Breaking News

டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து Delimitation Bill.

அட்மின் மீடியா
0

டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து Delimitation Bill.



நாடாளுமன்ற மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா போதிய ஆதரவின்றித் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில் மத்திய அரசை மிகக் கடுமையாகச் சாடிப் பதிவிட்டுள்ளார். மாநில உரிமைகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட போரில் தமிழகம் முதல் வெற்றியைப் பெற்றுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மசோதா தோல்வி அடைந்ததை ஒரு வரலாற்று வெற்றியாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மாநிலங்களின் அதிகாரத்தைப் பறித்து, தமிழகத்தின் நாடாளுமன்றக் குரலை ஒடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை சதி முறியடிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் பேராற்றலால் இன்று டெல்லியை வீழ்த்தியது தமிழகம் என கூறியுள்ளார்

வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலைச் சுட்டிக்காட்டி அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் அமர்ந்திருக்கும் அதிகார ஆணவத்தையும், அந்த ஆணவத்திற்குத் துணை போகும் உள்ளூர் அடிமைகளையும் (அதிமுக மற்றும் பாஜக கூட்டணி) வருகிற ஏப்ரல் 23 அன்று தமிழக மக்கள் ஒருசேர வீழ்த்துவார்கள். 

தமிழகத்தின் தன்மானத்தையும், சுயமரியாதையையும் காக்கும் அரணாகத் திமுக மற்றும் இந்தியா கூட்டணி விளங்கும் என்பதை இந்தத் தோல்வி நிரூபித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் இன்று வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிப் போராட முதல்வர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த மக்கள் போராட்டத்தின் எழுச்சியே நாடாளுமன்றத்தில் மசோதா வீழ்வதற்கு தார்மீக பலத்தைக் கொடுத்ததாகத் திமுக நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

மக்களவையில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில், அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேறத் தேவையான 326 வாக்குகள் (3-ல் 2 பங்கு) கிடைக்கவில்லை. மசோதாவிற்கு ஆதரவாக 278 வாக்குகளும், எதிராக 211 வாக்குகளும் பதிவாகின. குறிப்பாகத் திமுக எம்.பி-க்கள் உள்ளிட்ட தென்னிந்திய உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் எதிர்த்து வாக்களித்தது மசோதாவின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback