Breaking News

தமிழகத்தில் அரசுப் பணியில் சேர தமிழ் மொழி பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்..!மதுரை உயர்நீதிமன்றம்

அட்மின் மீடியா
0

CBSE பாடதிட்டத்தில் தமிழ் மொழி இல்லாமல் படித்துவிட்டு தமிழக அரசு வேலை ஏன் கேட்கின்றீர்கள் - மதுரை உயர்நீதிமன்றம்

தேனியை சேர்ந்த ஜெயக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், 



நான் மின் உற்பத்தி கழகம் தேனி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தேன். தமிழ் மொழியை ஒரு பாடமாக படிக்காததால், இரண்டு ஆண்டுகளில் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாததால் என்னை பணியில் இருந்து நிறுத்தி வைத்தனர். 

இந்த நிலையில், நான் டிஎன்பிஎஸ்சி நடத்திய மொழி தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளேன். எனவே என்னை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்'' என அந்த மனுவில் கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி மனுதாரரை பணியில் மீண்டும் சேர்க்க உத்தரவிட்டார். 

இந்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தால் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் ஜெயசந்திரன், பூர்ணிமா முன்னிலையில் விசாரணைக் கு வந்தது.

ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், '' மனுதாரரின் தந்தை கப்பல் படையில் வேலை பார்த்தவர். இடம் மாறுதல் செய்யப்பட்டதால் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்ததால், அவர் தமிழ் கற்கவில்லை. ஆனால் தற்போது மொழி தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளார். எனவே பணி வழங்க மறுக்க கூடாது என வாதிட்டார்.

இதை தொடர்ந்து நீதிபதிகள், '' சிபிஎஸ்இ கல்வியில் படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள். தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும்?

தமிழ்நாடு அரசின் அரசு பணியில் பணிபுரிய வேண்டும் எனில், தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அரசின் பணியாளருக்கு தமிழ் தெரியாது எனில் என்ன செய்வது? அவர் எப்படி அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியும்? 

இங்கு மட்டும் அல்ல, எந்த மாநிலத்தில் அரசு பணி புரிந்தாலும், அந்த மாநிலத்தின், மொழி தெரிந்து இருக்க வேண்டும். தெரியவில்லை எனில் என்ன செய்வது?.குறிப்பிட்ட கால அளவிற்குள், மாநில அரசு சார்பில் நடத்தப்படும் மொழி தேர்வில் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு மாநில அரசின் அலுவலக மொழி தெரியவில்லை எனில், பொது பணிக்கு ஏன் வருகிறீர்கள்? எனவே, அனைத்து தரப்பினரும், இறுதி விவாத்திற்கு தயாராக வர வேண்டும்'' என கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback