சீமான் வீட்டில் போலீஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் கொலை முயற்சி மற்றும் ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
சீமான் வீட்டில் போலீஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் கொலை முயற்சி மற்றும் ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் போலீசார் நாளை காலை விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என சம்மன் ஒட்டிய போது, அந்த சம்மன் உடனடியாக கிழிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரிக்க போலீசார் சீமான் வீட்டிற்கு சென்ற போது, காவல்துறை தரப்பில் எதற்காக சம்மன் ஒட்டிய சில நிமிடங்களில் கிழித்தீர்கள் என்று கேட்கப்பட்ட போது, திடீரென போலீசார் மற்றும் சீமானின் பாதுகாவலர் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக மாறியது.இதன்பின் 2 போலீசார் இணைந்து உடனடியாக சீமானின் பாதுகாவலரை குண்டுக் கட்டாக போலீஸ் வேனுக்கு தூக்கிச் சென்றனர். அவரிடம் இருந்து கைத் துப்பாக்கியையும் போலீசார் கைப்பற்றினர்.
இந்த சம்பவத்தை பார்த்த சீமானின் மனைவி கயல்விழி, உடனடியாக மன்னிப்பு கோரியுள்ளார். அப்போது எதற்காக சம்மனை கிழித்தீர்கள் என்ற கேள்விக்கு, கயல்விழி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து போலீசார் அளித்த சம்மனை கிழித்தவரையும் கைது செய்தனர்.
மேலும் விசாரணையில், கைத் துப்பாக்கியை போலீசாரை நோக்கி நீட்டியவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் சீமான் வீட்டு காவலர் அமல்ராஜை, போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்ற நிலையில், அவர்மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை முயற்சி வழக்கு மற்றும் 2 ஆயுத வழக்கு என 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது அமல்ராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
