தமிழக அரசு கடனை அடைக்க 90 ஆயிரத்து 558 ரூபாய் பணம் அனுப்பிய சவுதியில் உள்ள தமிழர்...முழு விவரம்
தமிழக அரசு வாங்கிய கடனை அடைக்க, சவுதி அரேபியாவில் வசிக்கும் பொறியாளர் தன் பங்காக, 90 ஆயிரத்து 558 ரூபாயை, முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவில் உள்ள கொப்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னராஜா செல்லதுரை இவர் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூபாய் 90 ஆயிரத்து 558 ரூபாயை,அனுப்பி உள்ளார்.மேலும் முதல்வர் தனிப்பிரிவுக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில்
நான் சவுதி அரேபியாவில் பொறியாளராக பணிபுரிகிறேன். பொருளாதாரம் படிக்கிறேன். தமிழகத்தின் 2022 - 23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை செய்தி வழியே பார்த்தேன். அதில், 2023 மார்ச் 31 நிலவரப்படி, தமிழக அரசின் கடன் ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 348.73 கோடியாக இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 ஆகும். இதன்படி கணக்கிட்டால், ஒவ்வொரு தமிழன் மீதும் உள்ள தமிழக அரசின் கடன் ரூ.90 ஆயிரத்து 558 ஆக உள்ளது.
இதை அறிந்து நான் அதிக வருத்தம் அடைந்தேன். எனவே தமிழக அரசின் கடனை அடைக்கும் வகையில் எனது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன்..அதற்காக கடந்த ஆறு மாதத்தில், 90 ஆயிரத்து 558 ரூபாய் சேமித்து, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளேன்.
தமிழக அரசின் கடனை செலுத்த என் பங்களிப்பை பயன்படுத்தவும். தமிழகம் ஒரு குடும்பம். இக்குடும்பத்தில் பிறந்ததில், நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்